தெலங்கானா மாநிலம் நிர்மலில் மக்களவைத் தேர்தலையொட்டி நேற்று நடந்த காங்கிரசு பரப்புரைக் கூட்டத்தில் இராகுல்காந்தி பங்கேற்றார்.
அடிலாபாத் மக்களவைத் தொகுதி காங்கிரசு வேட்பாளர் அத்ரம் சுகுணாவை ஆதரித்து அவர் பேசியதாவது….
நாட்டில் அரசியல் சாசனத்தை மாற்ற சதி நடக்கிறது. தற்போது 2 கோட்பாடுகளுக்கு இடையே தேர்தல் நடக்கிறது. ஒருபக்கம் அரசியல் சாசனத்தைக் காக்க காங்கிரசு முயற்சிக்கிறது. மறுபுறம் பாஜக அரசியல் சாசனத்தை அழிக்க முயல்கிறது. இன்று நாட்டில் உள்ள ஏழைகளுக்கு எது கிடைத்ததோ, அது அரசியலமைப்பின் மூலம் கிடைத்தது.
பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்படும். பிற்படுத்தப்பட்டோர், தலித், பழங்குடியின சமூகத்தினர் முன்னேறக்கூடாது என பாஜக விரும்புகிறது.
நாட்டில் தேர்வு செய்யப்பட்ட கோடீஸ்வரர்களின் 16 இலட்சம் கோடி கடன்களை நரேந்திரமோடி தள்ளுபடி செய்தார்.
காங்கிரசு ஆட்சியில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டபோது விமர்சனம் எழுந்தது. ஆனால், நரேந்திரமோடி பணக்காரர்களின் கோடிக்கணக்கான ரூபாய் கடன்களைத் தள்ளுபடி செய்தபோது வளர்ச்சி நடக்கிறது எனக் கூறிக்கொள்கின்றனர்.
மக்களவை தேர்தலில் காங்கிரசு வென்றால் ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.
நாட்டில் உள்ள ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு ரூ.1 இலட்சம் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும்.
தெலங்கானாவில் ஆள்வது ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் அரசாக உள்ளது. உங்கள் நீர், காடுகள் மற்றும் நிலங்களை நாங்கள் பாதுகாப்போம். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.400 சம்பளம் வழங்கப்படும். ஆஷா, மதிய உணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் சம்பளம் இரட்டிப்பாக்கப்படும்.
மத்தியில் காங்கிரசு ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி முடிப்போம். பாஜக வெறுப்பைப் பரப்புகிறது, நாங்கள் அன்பைப்பரப்புகிறோம்.
நரேந்திரமோடி இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர். அவர் உங்களிடமிருந்து இடஒதுக்கீட்டைப் பறிக்கப் பார்க்கிறார். தனியார் மயம் என்றால் இடஒதுக்கீடு நீக்கம். ஒப்பந்த முறை என்றால் இடஒதுக்கீடு நீக்கம். அக்னிவீர் என்றால் இடஒதுக்கீடு நீக்கம்.
இப்படி நடக்காமல் நாட்டைக் காக்க வாருங்கள்
இவ்வாறு அவர் பேசினார்