அண்மைக்காலத்தில் தமிழீழ மக்களுக்கு நல்ல தீர்வு காண முயன்று வருவதாக சிங்கள அதிபர் ரணில்விக்கிரமசிங்கே பேசிவருகிறார்.
இதில் துளியும் உண்மையில்லை முற்றிலும் ஏமாற்றுவேலை என்பது தற்போது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
வருகிற மார்ச் ஒன்பதாம் தேதி, யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபை தேர்தல் நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில் முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையிலான தமிழ்த்தேசியப்பசுமை இயக்கம் போட்டியிடுகிறது.
அக்கட்சி பெயரில் போட்டியிடாமல் சுயேச்சையாகப் போட்டியிடுகிறது.
ஓர் அரசியல்கட்சி ஏன் சுயேச்சையாகப் போட்டியிடவேண்டும்?
அங்குதான் சிங்கள இனவெறியின் கோரமுகம் வெளிப்படுகிறது.
அது என்ன? என்பதற்கு பொ.ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள அறிக்கை சாட்சி.
அவரது அறிக்கையில்,
நல்லூர்ப் பிரதேசசபைத் தேர்தலில் (09.03.2023) தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகிய எனது தலைமையில் மாம்பழச் சின்னத்தில் சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடுகின்றது.
தேர்தல் ஆணையத்தில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தை ஒரு கட்சியாகப் பதிவு செய்வதற்கு நாம் விண்ணப்பித்திருந்தபோதும் கட்சியின் பெயரில் தமிழ்த்தேசியம் என்ற சொல் இடம்பெற்றிருப்பதையும், எமது யாப்பில் வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய வாழிடம் என்று குறிப்பிடப்பட்டிருப்பதையும் தேர்தல் ஆணைக்குழு ஆட்சேபித்ததன் காரணமாக சுயேச்சைக் குழுவாகவே நாம் இத்தேர்தலை எதிர்கொள்கின்றோம்.
உங்கள் அனைவரினதும் ஆதரவை வேண்டி என்னுடன் இணைந்து போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களினதும் விபரங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.
நாட்டுக்கே முன்மாதிரியாய் நல்லதொரு மாற்றம் நல்லூரில் இருந்து தொடங்க உங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறோம்.
மக்களே எமது எஜமானர்கள் வேறு எந்த சக்திகளினதும் உத்தரவுகளுக்கு நாம் கீழ்ப்படிவதில்லை என்பதால் எங்களிடம் படைப்பலமோ பணப்பலமோ இல்லை. உங்கள் ஆதரவுப்பலம் ஒன்று மட்டுமே எங்களை வெற்றிபெற வைக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்த்தேசியம் என்கிற சொல்லையும் வடக்கு கிழக்கு என்கிற சொல்லையுமே ஏற்றுக்கொள்ளாத் சிங்களம், தமிழர்களுக்கு உரிய உரிமை கொடுத்துவிடுமா? என்ன?
எல்லாம் ஏமாற்றுவேலை. இதை அனைவரும் உணரவேண்டும்.