தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 4 நாள் பயணமாக நேற்று முன்தினம் இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
டெல்லி சென்ற அவருக்குக் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கினார்.
நேற்று காலை 11.50 மணிக்கு பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்க நாடாளுமன்றத்துக்குப் புறப்பட்டார்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் இருந்த மு.க.ஸ்டாலினை காங்கிரசுத் தலைவர் சோனியா காந்தி பகல் 12.30 மணிக்கு நேரில் சென்று சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து மதியம் ஒரு மணிக்கு பிரதமரை அவரது அலுவலகத்தில் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். சுமார் அரை மணி நேரம் அவர்கள் பேசிக்கொண்டனர். அப்போது தமிழகம் தொடர்பான 14 கோரிக்கைகள் அடங்கிய 41 பக்க மனுவை பிரதமரிடம் வழங்கினார்.
இதன் பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரியை மதியம் 1.40 மணிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மாலை 3.30 மணிக்கும் சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்தார்.
இந்தச் சந்திப்புகளுக்குப் பிறகு மாலை 4.40 மணி அளவில் தமிழ்நாடு அரசு இல்லத்துக்குத் திரும்பினார்.
பின்னர் மாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது….
தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு எனது 3 ஆவது டெல்லி பயணம் இது. இந்தப் பயணத்தின்போது பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்தேன். அவர் உடனடியாக நேரம் ஒதுக்கித் தந்தார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சந்திப்பின் போது தமிழகத்தின் மிக முக்கியமான 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் வழங்கினேன்.
அதிலுள்ள முக்கியத்துவத்தை தெளிவாக எடுத்துரைத்தேன். அவற்றையெல்லாம் பொறுமையாகக் கேட்ட பிரதமர், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அவர் அளித்த உறுதிக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து ஊடகம் வாயிலாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமருடனான இந்தச் சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. மன நிறைவாகவும் அமைந்தது.
நான் அவரிடம் அளித்த கோரிக்கைகளில் சில முக்கியமான கோரிக்கைகளைச் சொல்ல விரும்புகிறேன். இலங்கையிலுள்ள அசாதாரண சூழ்நிலையை நீங்கள் அறிவீர்கள். அங்கிருந்து வரும் தமிழர்களுக்கு எல்லா வகையிலும் உதவிகள் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவர்களுக்கு அரசியல் மற்றும் பொது உரிமைகள் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். மீனவர் பிரச்சினைகள் பற்றியும் பேசினேன். மீன் பிடி உரிமைகளைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் கேட்டேன். கச்சத்தீவு கோரிக்கையையும் முன்வைத்தேன்.
உக்ரைனில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்கள் இந்தியாவிலேயே மருத்துவப் படிப்பைத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன். நீட் விலக்கு தொடர்பாக சட்டசபையில் 2 ஆவது முறை மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை அது குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. எனவே நீட் விலக்குக்கு அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தேன்.
இதுபோல உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தபோது, தமிழகத்துக்கான வெள்ள நிவாரண நிதியை வழங்குமாறு கேட்டேன். காவல் மற்றும் தீயணைப்புத் துறைக்குப் போதிய நிதி ஒதுக்கீடு தரவேண்டும் என்றும் கேட்டேன்.
அதைப்போல பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தமிழகத்தில் புதிய விமான நிலையத்துக்கு பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள நிலத்தை ஒதுக்கித் தர வேண்டும் என்றும், டி.ஆர்.டி.ஓ. ஆய்வகங்கள் அமைக்க வேண்டும் என்றும், சேலம் உருக்காலையில் உள்ள மிகை நிலத்தைப் பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்துக்குத் தரவேண்டும் என்றும், கோவையில் ஏவியேஷன் மையம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தேன்.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரியிடமும் பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரையுள்ள நெடுஞ்சாலையை 6 வழிச்சாலையாக ஆக்க வேண்டும் என்றும், மதுரவாயல் உயர்மட்டச் சாலையை ஸ்ரீபெரும்புதூர் வரை நீட்டிக்க வேண்டும் என்றும், தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டுக்கு உயர்மட்டச் சாலை அமைக்க வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள நெடுஞ்சாலை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.
இந்த சந்திப்புகள் மனநிறைவை அளித்தன. இந்த உரையாடலின் போது நிதின் கட்காரி, தமிழகத்தில்தான் நெடுஞ்சாலைத் திட்டங்கள் அதிக அளவு செயல்படுத்தப்படுவதாகக் கூறினார். அதேபோல ராஜ்நாத் சிங், பாதுகாப்பு வழித்தடத்துக்கு தமிழகம் தான் உகந்த மாநிலம் என்று சொன்னார்.
இந்த கோரிக்கைகள் பற்றி எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே பேசி இருக்கிறார்கள். தொடர்ந்து அதை வலியுறுத்துவார்கள் என்று தமிழக மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாளை (அதாவது இன்று) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரையும் சந்தித்து தமிழகம் தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்க இருக்கிறேன்.
அதைப்போல டெல்லியில் உள்ள மாதிரி பள்ளியையும், மருத்துவமனையையும் பார்வையிட உள்ளேன். அப்போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் என்னுடன் வர இருப்பதாகக் கூறியிருக்கிறார்.
நாளை(சனிக்கிழமை) மாலை அண்ணா – கலைஞர் அறிவாலயத்தைத் திறந்து வைக்க இருக்கிறேன். பத்திரிகையாளர்கள் அனைவரும் அந்த விழாவில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்து மு.க.ஸ்டாலின் கூறியதாவது….
இலங்கை தமிழர்கள் விசயத்தில் எது நியாயமானதோ அதைச் செய்வதாக பிரதமர் கூறி இருக்கிறார்.
டெல்லியில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் தமிழக அரசு அளித்த நிதியில் முறைகேடுகள் நடந்திருந்தால் அது பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படும். நாளை மாதிரி பள்ளியைப் பார்க்கும்போது அதுபற்றிக் கேட்கிறேன். கச்சத்தீவு விவகாரத்தைப் பொறுத்தவரை சட்டரீதியாக ஆலோசித்து வருகிறோம். அதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும்.
பிரதமருக்கு பலமுறை நன்றி சொன்னது எதற்கு என்றால் அவர் தமிழகத்தின் கோரிக்கைகளுக்கு உறுதி தந்ததற்காக நன்றி தெரிவித்திருக்கிறேன். செய்து முடித்ததற்காக அல்ல.
இலங்கைத் தமிழர் தொடர்பான கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர் சொல்லி இருக்கிறார். அகதிகள் என்று அழைக்கப்பட்ட அவர்களை புலம்பெயர்ந்த தமிழர்கள் என்று சொல்லி அவர்களுக்கு அதிக வசதிகள் செய்து கொடுத்து இருக்கிறோம்.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் எல்லாக் கட்சி உறுப்பினர்களையும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி செய்வதாக என்னைப் பாராட்டினார்கள்.
நான் எப்போது டெல்லி வந்தாலும் காங்கிரசுத் தலைவர் சோனியா காந்தியைப் பார்க்காமல் சென்றது கிடையாது. அதுபோல நாடாளுமன்றத்தில் நான் இருக்கும் போது அவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமல்ல, கட்சி அலுவலகத் திறப்பு விழாவுக்கு அவரும், இராகுல் காந்தியும் வருவதாகச் சொல்லி இருக்கிறார்கள்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.