மு.க.ஸ்டாலினைப் பாராட்டிய நடிகர் சூர்யாவின் கடிதம் போலி – மேலாளர் அறிவிப்பு

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்கள் வழங்கும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் சனவரி 7,2022 அன்று தீர்ப்பு வ்ழங்கியது.

இதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், நடிகர் சூர்யாவும் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டதாகச் சமூகவலைதளங்களில் சூர்யா கையெழுத்திட்ட ஒரு கடிதம் பரவியது.

அதில்..

இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை உறுதி செய்துள்ள உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.இதற்கான சட்டப்போராட்டத்தை முன்னின்று நடத்திய திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நாடு முழுவதுமுள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் அவர்களுடைய நலனுக்கான இயக்கங்கள் நன்றி தெரிவித்துவருகின்றனர்.அவர்களோடு நானும் அகரம் அறக்கட்டளை சார்பாக இணைந்து கொள்கிறேன்.

4000 மருத்துவக்கல்வி இடங்கள் இதன்மூலம் இதர பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியருக்குக் கிடைக்கவிருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உயர்கல்வியில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மாணவர்களுடைய மொத்தப் பதிவுச் சுட்டெண் (Gross Enrolment Ratio) தேசிய மற்றும் மாநில சராசரிகளைவிட அதிகமாகும். எனவே, இந்தத் தீர்ப்பானது ஒரு வருடத்துக்கு 800க்கும் மேற்பட்ட கொங்கு மண்ணைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியர்களின் மருத்துவக்கல்விக் கனவை நனவாக்கும் என்பது எனது நம்பிக்கை.

சமூகநீதிப்பாதையில் தொடர்ந்து தமிழ்நாடு விறுநடை போடட்டும். நாமும் உடன் நிற்போம்.

இவ்வாறு அந்தக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு நிறைய வரவேற்புகள் கிடைத்துக் கொண்டிருந்த நேரத்தில், நேற்று மாலை நடிகர் சூர்யாவின் மேலாளர் ராஜசேகர்பாண்டியன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,8.1.2022 தேதியிட்டு சமூகவலைதளங்களில் பரவிவரும் சூர்யாவின் கடிதம் போலியானது. அதைப் புறக்கணியுங்கள். போலிக்கடிதம் வெளியிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Leave a Response