மீண்டும் அதே சாதியில் முதலமைச்சர் – கர்நாடகாவில் பாஜக அரசியல்

கர்நாடக முதலமச்சராக இருந்த பி.எஸ்.எடியூரப்பாவுக்கு 78 வயது நிறைவடைந்ததால் பாஜக மேலிட உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் பதவி விலகினார்.

இதைத் தொடர்ந்து பாஜக மேலிடம் புதிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒன்றிய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், ஜி.கிஷன் ரெட்டி, கர்நாடக மேலிட பொறுப்பாளர் அருண் சிங் ஆகியோரை பெங்களூருவுக்கு அனுப்பியது.

பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் நேற்று மாலை 7.30 மணிக்கு தர்மேந்திர பிரதான் தலைமையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது. இதில் முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டம் தொடங்கியதும் மூத்த சட்டமன்ற உறுப்பினர்கள், எடியூரப்பா அமைச்சரவையில் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மையின் பெயரை முதல்வராக முன்மொழிந்தனர். இதை பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களும், மூத்த தலைவர்களும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தனர். இதையடுத்து கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டதாக தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.

இதனால், மகிழ்ச்சி அடைந்த பசவராஜ் பொம்மை, மேலிட தலைவர்கள் தர்மேந்திர பிரதான், கிஷன் ரெட்டி, அருண் சிங் ஆகியோருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துப் பெற்றார். முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

கர்நாடகாவின் புதிய‌ முதல்வரை தேர்வு செய்யும் கூட்டம், தொடங்கிய 10 நிமிடங்களில் பசவராஜ் பொம்மை முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். 15 நிமிடங்களில் கூட்டம் நிறைவு பெற்றது.

முதலமைச்சராகத் தேர்ந்த்டுக்கப்பட்டிருக்கும் பசவராஜ் பொம்மை, 1988-89 காலக்கட்டத்தில் கர்நாடக முதலமைச்சராக இருந்த எஸ்.ஆர்.பொம்மையின் மகன்.

பசவராஜ் பொம்மை 28.1.1960 இல் ஹாவேரியில் பிறந்தார். பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்த இவர் புனேவில் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றினார். இவரது தந்தை எஸ்.ஆர்.பொம்மை ஜனதா கட்சியின் சார்பில் முதலமைச்சரானதைத் தொடர்ந்து அரசியலில் ஆர்வம் காட்டினார். அதைத் தொடர்ந்து ஜனதா கட்சியின் சார்பில் முதல்வரான இராமகிருஷ்ணஹெக்டே, ஜே.ஹெச்.படேல், தேவகவுடா ஆகியோருக்கு அரசியல் ஆலோசகராகவும் பணியாற்றினார்.

ஜனதா கட்சியில் இருந்து விலகிய பசவராஜ் பொம்மை, 2008 ஆம் ஆண்டில் எடியூரப்பா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். லிங்காயத்து வகுப்பைச் சேர்ந்த இவர் எடியூரப்பாவுக்கு நெருக்கமானவராக வலம் வந்தார்.

இவர் 2 முறை சட்டமேலவை உறுப்பினராகவும், 3 முறை ஷிகான் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். ​

2008 இல் எடியூரப்பா அமைச்சரவயில் நீர்வளத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 2019 இல் எடியூரப்பா மீண்டும் முதல்வரானபோது பசவராஜ் பொம்மை சட்டம் மற்றும் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டதும் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதை ஏற்றுக் கொண்ட ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்புவிடுத்தார்.

இதன்படி இன்று காலை 11 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவியேற்கிறார்.

எடியூரப்பா லிங்காயத் வகுப்பைச் சேர்ந்தவர், அவரை நீக்கிவிட்டு மீண்டும் அதே சாதியைச் சேர்ந்தவரையே முதலமைச்சராக்கியிருக்கிறது பாஜக. இது கர்நாடக அரசியலில் உள்ள சாதி ஆதிக்கத்ததை வெளிப்படுத்துவதாக உள்ளது.

Leave a Response