கோவைக்கு வருவாரா கமல் ? – மக்கள் கேள்வி

கொரோனா தினசரி பாதிப்பில் தமிழக அளவில் கோவை தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. தற்போது படிப்படியாக பாதிப்பு குறைந்து வருகிறது. இதற்கிடையே உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 76 ஆயிரத்து 910-ஆக உயர்ந்தது.

இதுவரை இல்லாத அளவாக, கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 4,488 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 453-ஆக உயர்ந்து உள்ளது.

கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 39 ஆயிரத்து 112 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று ஒரே நாளில் 38 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். இதனால், மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,345-ஆக உயர்ந்துள்ளது.

முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது.

அதன்படி, 29 ஆம் தேதி – 3692 பேரும், 30 ஆம் தேதி – 3,537 பேரும், 31 ஆம் தேதி – 3,488 பேரும், 1 ஆம் தேதி – 3,332 பேரும், 2 ஆம் தேதி -3,061 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இப்படி கோவை மக்கள் பாதிப்பில் இருக்கும் போது, கோவை மாவட்டத்தில் வெற்றி பெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாருமே மக்கள் பணியில் ஈடுபடாமல் ஒதுங்கியுள்ளனர்.

அவர்கள் மட்டுமல்ல, தேர்தல் நேரத்தில் கோவை மக்கள் மீது பாசமழை பொழிந்த நடிகர் கமல்ஹாசனும் கோவை பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

தேர்தல் நேரத்தில் மட்டும் வருவது என்றால், எங்களை வெறுமனே வாக்கு வங்கியாக மட்டும் பார்க்கிறாரா கமல்? மக்கள் மீது அக்கறை உள்ள அரசியல் தலைவராக இருந்திருந்தால் மக்களுக்கு ஆறுதல் கூற வந்திருப்பார் என்று அவர் மீது கடும் விமர்சனம் செய்கிறார்கள் கோவை மக்கள்.

Leave a Response