வைகோ மகன் துரை வையாபுரி தேர்தலில் போட்டியிடுகிறாரா?

மதுரை அழகர் கோவில்சாலையில் உள்ள தமிழ்நாடு விடுதியில் மதிமுக சார்பில் தேர்தல் நிதி அளிப்பு விழா நடந்தது. மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் புதூர் பூமிநாதன் தலைமை வகித்தார்.

மதுரை, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் இணைந்து பொதுச்செயலாளர் வைகோவிடம் ரூ.1 கோடியே 1 இலட்சத்து 55 ஆயிரம் தேர்தல் நிதி வழங்கினர்.

அதன்பின் வைகோ நிர்வாகிகள் மத்தியில் பேசியதாவது….

தமிழகத்தில் தேர்தல் நிதி வசூலிக்கும் ஒரே கட்சி மதிமுக. தமிழகத்தில் மற்ற கட்சிகளுக்கு நிதி தேவையில்லை, அவர்களிடம் பணம் குவிந்துள்ளது. நம்மிடம் பணம் இல்லை. ஆனால் இலட்சியங்களுக்காக, கொள்கைகளுக்காக போராடும் எண்ணம் இருக்கிறது.

அதனால் கூச்சமில்லாமல் நாணம் இல்லாமல் தலைநிமிர்ந்து சென்று மக்களிடம் நிதி வசூலிக்கும் தகுதி நமக்கு மட்டுமே இருக்கிறது. நிதி கேட்க வரும் மதிமுகவினரை மக்களும் மதிக்கிறார்கள். அவர்கள் கொடுக்கிற தொகை சிறியதாக இருந்தாலும் அன்போடு வழங்குகிறார்கள்.

நம்முடைய பொருளாதார நிலைமை என்ன என்பது உங்களுக்குத் தெரியும். 20 ஆண்டிற்கு முன்பு இருந்த அரசியல் தற்போது இல்லை. ஆனால், காலம் இப்படியே இருக்காது.

காலம் மாறும். மாற்றங்களைக் கொடுக்கும். இலட்சிய தாகங்கள் கொண்ட இளைஞர்களை உருவாக்க வேண்டும். எதையெல்லாம் நாம் முன்பு சொன்னமோ, எதற்கெல்லாம் போராடினோமோ அதை மற்றவர்கள் இன்று செய்கிறார்கள்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணிகளை மற்ற கட்சிகள் அமைக்கின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஸ்டெர்லைட் போராட்டத்தை மதிமுக முன்னின்று நடத்தியது.

ஹைட்ரோ கார்பன் போராட்டத்தை மதிமுக நடத்தியது. 7 பேர் விடுதலைக்காக நாம் தான் ஆரம்பம் முதலே போராடினோம். அவர்களுடைய தூக்கு தண்டனையை இரத்து செய்து கொடுத்த கட்சி மதிமுக.

நாம் சாதித்து இருக்கின்றோம். இந்தச் சாதனைகளை எண்ணி நம்மை நாமே ஆறுதல்படுத்திக் கொள்வது மட்டுமில்லை, இனி வரும் காலத்தில் இயக்கத்திற்கு புதிய உறுப்பினர்களைக் கொண்டு வந்து சேர்த்து புத்துயிர் கொடுக்க வேண்டும்.

புதிய சக்தியை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.எதையும் எதிர்பாராமல் உள்ளவர்கள் கட்சி மதிமுகதான். நாம் ஜெயிக்கவில்லையே, நிறைய ‘சீட்’ கிடைக்கவில்லையே என்ற கவலை இருக்கும்.

ஆனால், விலகிச் செல்கிற எண்ணமே நம்மிடம் இல்லை. செல்ல வேண்டியவர்கள் சென்றுவிட்டார்கள். தற்போது இருப்பவர்கள், யாருமே எதையும் எதிர்பார்க்காமல் உள்ளனர்.

சட்டமன்றத் தேர்தலில் குறைந்த இடங்களே நமக்கு கிடைக்கக் கூடும், அதைப்பற்றி தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம். பொதுத்தேர்தல் முடிந்ததும் கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி முக்கிய முடிவை அறிவிக்க இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது…..

70 நாள்களுக்கு மேலாக கடுங்குளிரில் போராடி வரும் விவசாயிகளுக்கு எதிராக ஈவு இரக்கமற்று பிரதமர் நடந்து கொள்கிறார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும்.

அதிமுக, பாஜக தலையெடுக்கக் கூடாது. தோற்கடித்தே ஆக வேண்டும். எனது மகன் துரை வையாபுரி தேர்தலில் போட்டியிடமாட்டார். மக்கள் நலக்கூட்டணிக்கு மீண்டும் வாய்ப்பில்லை என்றார்.

Leave a Response