மத்திய அரசின் கண் துடைப்பு – அம்பலப்படுத்தும் பழ.நெடுமாறன்

நாடு முழுதும் பெரும் எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளது மத்திய அரசின் புதியகல்விக் கொள்கை.ஆனாலும் அதைச் செயல்படுத்தியே தீருவது என மத்திய அரசு முனைப்புக்காட்டி வருகிறது. அதற்காக ஆசிரியர்களிடம் கருத்து கேட்பு என்றொரு நிகழ்வை நடத்தி வருகிறது.

இதற்காக மத்தியமைச்சருக்கு பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்….

புதிய தேசியக் கல்விக்கொள்கை குறித்து பள்ளி ஆசிரியர்களும், முதல்வர்களும் கருத்தினை ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்கலாம் என மத்திய மனித வளமேம்பாட்டுத் துறையமைச்சர் அறிவித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஆசிரியர்கள் கூடிப் பேசவும் தங்களுக்குள் விவாதிக்கவும் இயலாத கரோனா காலச் சூழ்நிலையில் அமைச்சரின் அறிவிப்பு வெறும் கண்துடைப்பாகும்.

ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேசியக் கல்விக்கொள்கையின் நகல் திட்டம் வெளியிடப்பட்ட போது ஆசிரியர் அமைப்புகளும், கல்வியாளர்களும் தெரிவித்த கருத்துக்கள் எதனையும் அரசு ஏற்கவில்லை மேலும் புதியகல்வித் திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும் என தலைமையமைச்சர் மோடி அறிவித்த பிறகு ஆசிரியரிடம் கருத்துக் கேட்பதில் எவ்விதப் பயனும் இல்லை.

எனவே ஒப்புக்காக இவ்வாறு கேட்பது சனநாயக மரபுகளைக் குழிதோண்டிப் புதைப்பதாகும். மாணவர்களின் எதிர்காலத்தைக் கொஞ்சமும் எண்ணிப் பார்க்காமல் அவசர அவசரமாக புதிய கல்வித்திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு செய்யும் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைவரும் ஒன்று திரண்டு போராட முன்வருமாறு வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response