இது ராஜ தந்திரம் இல்லை நரி தந்திரம் ரஜினி அவர்களே – கொதிக்கும் இளைஞர்கள்

நடிகர் ரஜினிகாந்த், சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் ரஜினிகாந்திடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்…..

கேள்வி – தேசிய விருதுப் பட்டியலில் தமிழ் மொழிப் படங்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறதே?

பதில்:- தமிழ்ப் படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. அது என்ன சமாசாரம் என்பது குறித்து அந்த தேர்வுக்குழு தான் பதில் அளிக்க வேண்டும்.

கேள்வி:- மோடியும்-அமித்ஷாவும் கிருஷ்ணன்-அர்ஜூனன் போன்றவர்கள் என்று நீங்கள் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதே?

பதில்:- காஷ்மீர் விவகாரம் ராஜதந்திரத்துடன் கையாளப்பட்டது. ஒருவர் திட்டத்தைச் சொல்பவர், இன்னொருவர் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியவர் என்பதால் தான் கிருஷ்ணன்-அர்ஜூனன் என்று கருத்து தெரிவித்தேன்.

காஷ்மீர் விவகாரம் தேசிய பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது. காஷ்மீர் தான் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு தாய் வீடாக உள்ளது. பயங்கரவாதிகள் இந்தியாவில் ஊடுருவ நுழைவுவாயிலாக இருக்கிறது. அந்த காஷ்மீரைக் கைப்பற்ற ராஜதந்திர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

முன்கூட்டியே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, பிரச்சினைக்குரியவர்களை வீட்டு காவலில் வைத்து அதன்பிறகே முறையாக நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளனர். இது அருமையான ராஜதந்திர நடவடிக்கை.

இதை ஒரு விவாதப் பொருளாக்கி எல்லா விஷயமும் தெரிந்து சம்பந்தப்பட்டவர்கள் விழித்து கொண்டிருந்தால் இந்த நடவடிக்கை சாத்தியமே கிடையாது. தயவுசெய்து நமது அரசியல்வாதிகள் எதை அரசிலாக்குவது? எதை அரசியலாக்கக் கூடாது? என்பதை உணரவேண்டும். இது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயம். அதற்காகத்தான் அந்தக் கருத்தை நான் கூறினேன்.

கேள்வி:- உங்கள் கட்சி தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும்?

பதில்:- அதை நிச்சயமாகச் சொல்வேன். உங்களிடம் சொல்லாமல் இருக்கமாட்டேன்.

கேள்வி:- தமிழகத்தின் அரசியல் மையமாக மீண்டும் போயஸ் கார்டன் மாறுமா?

பதில்:- காத்திருந்து பாருங்கள்.

மேற்கண்டவாறு ரஜினிகாந்த் பதில் அளித்தார்.

ரஜினியின் காஷ்மீர் குறித்த இந்தக் கருத்துகள் மேலும் சர்ச்சையை அதிகரித்திருக்கின்றன. ரஜினியின் அரசியல் அறிவு பூஜ்யம் என்பது இதன் மூலம் தெரிய வருவதாகப் பலரும் விமர்சனம் செய்துவருகின்றனர்.

எங்கள் வலி உணராதவன் எங்களுக்கு தலைவன் ஆக முடியாது. இது ராஜ தந்திரம் இல்லை ரஜினி அவர்களே இது நரி தந்திரம். ராஜ தந்திரத்திர்கும் நரி தந்திரத்துக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது

என்றும் விமர்சனம் செய்துவருகிறார்கள்.

Leave a Response