
2019 நாடாளுமன்றத் தேர்தல் – தமிழகத்தில் தேனி தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க.கூட்டணி வெற்றி பெற்றது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 5.98 கோடி ஓட்டுகளில் 4 கோடியே 23 லட்சத்து 66 ஆயிரத்து 721 ஓட்டுகள் செலுத்தப்பட்டு இருந்தன.
அவற்றில் தி.மு.க. கூட்டணி, 2 கோடியே 23 லட்சத்து 3 ஆயிரத்து 310 ஓட்டுக்களைப் பெற்றுள்ளது. இதன் சதவீதம் 52.64 ஆகும்.
ஆனால் அ.தி.மு.க. கூட்டணி, ஒரு கோடியே 28 லட்சத்து 30 ஆயிரத்து 314 ஓட்டுக்களை மட்டுமே பெற்றுள்ளது. இதன் சதவீதம் 30.28 ஆகும்.
தி.மு.க. மட்டும் 32.76 சதவீத ஓட்டுக்களைப் பெற்றுள்ளது.
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் 12.76 சதவீத ஓட்டுக்களையும்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 2.40 சதவீதம்,
இந்திய கம்யூனிஸ்டு 2.43,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1.11 சதவீதம் ஓட்டுக்களைப் பெற்றுள்ளன.
(விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒரு வேட்பாளர் மற்றும் ம.தி.மு.க. ஐ.ஜே.கே., கொங்கு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர்கள், தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர். இந்தக் கட்சிகளுக்கான ஓட்டு சதவீதம் பிரித்துக் காட்டப்படவில்லை. ஆனாலும் 1.19 சதவீத ஓட்டுக்களை தி.மு.க. கூட்டணிக்கு இந்தக் கட்சிகள் அளித்ததாக கணக்கிடப்படுகிறது).
அ.தி.மு.க. மட்டும் 18.48 சதவீத ஓட்டுக்களைப் பெற்றுள்ளது.
அதன் கூட்டணிக் கட்சிகளான பா.ஜ.க. 3.66 சதவீதம்,
தே.மு.தி.க. 2.19,
பா.ம.க. 5.42 சதவீதம் ஓட்டுக்களைப் பெற்றுள்ளன.
(புதிய தமிழகம், தமிழ்மாநில காங்கிரஸ் போன்ற சில கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டனர். இந்த கட்சிகளுக்கான ஓட்டு சதவீதம் பிரித்து காட்டப்படவில்லை. ஆனாலும் 0.53 சதவீத ஓட்டுக்களை இந்தக் கட்சிகள் பங்களித்ததாக கணக்கிடப்படுகிறது).
இந்தத் தேர்தலில் அ.ம.மு.க, தமிழகம் முழுவதுமே 22 லட்சத்து 25 ஆயிரத்து 377 ஓட்டுக்களை மட்டுமே பெற்றுள்ளது. இது 5.25 சதவீதமாகும்.
தேனியில் அதிகபட்சமாக அ.ம.மு.க. ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 50 ஓட்டுக்களைப் பெற்றுள்ளது. குறைந்தபட்சமாக கிருஷ்ணகிரியில் 8,867 ஓட்டுக்களை மட்டுமே அந்தக் கட்சி வாங்கியுள்ளது.
முதன் முறையாக தேர்தலில் குதித்து தமிழகம் முழுவதும் 15 லட்சத்து 75 ஆயிரத்து 620 ஓட்டுக்களை மக்கள் நீதி மய்யம் பெற்றிருக்கிறது. இதன் சதவீதம் 3.72 ஆகும்.
அதுபோல நாம் தமிழர் கட்சியும் ஒவ்வொரு தேர்தலிலும் விடாப்பிடியாக போட்டியிட்டு இந்தத் தேர்தலில் ஓட்டு சதவீதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி, 16 லட்சத்து 45 ஆயிரத்து 185 ஓட்டுக்களை, அதாவது 3.88 சதவீத ஓட்டுக்களை அந்தக் கட்சி பெற்றுள்ளது.
ஒவ்வொரு தேர்தலிலும் நோட்டாவுக்கு (யாருக்கும் வாக்களிக்கவில்லை) தனி இடம் கிடைப்பதுண்டு. இந்தத் தேர்தலில் 5 லட்சத்து 41 ஆயிரத்து 150 ஓட்டுக்களை நோட்டா பெற்றுள்ளது. இது 1.28 சதவீதமாகும். அதிகபட்சமாக ஸ்ரீபெரும்புதூரில் 23 ஆயிரத்து 343 ஓட்டுக்களும், குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 6,131 ஓட்டுக்களும் நோட்டாவுக்கு விழுந்தன.


