ஸ்டெர்லைட்டை மீண்டும் திறப்பேன் என்கிறார் அனில் அகர்வால் – எச்சரிக்கை மணி அடிக்கும் விஜயகாந்த்

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த்
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூட
அரசு ஆணைப்பிறப்பித்திருப்பதை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்…

ஸ்டெர்லைட் ஆலையை மிகத்தாமதமாக மூடுவதாக அரசு வெளியிட்ட இந்த அரசாணை, தாமதமாக வந்தாலும் இனிவரும் எதிர்காலச் சந்ததிகளுக்கு பயனளிக்ககூடிய ஒரு ஆணையாக இருக்கும் என்பதை தேமுதிக வரவேற்கிறது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய அனைத்து போராட்டகாரர்களுக்கும் கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

மேலும் அணில் அகர்வால் அவர்கள் உச்சநீதிமன்றத்தின் மூலமாக வழக்கு தொடுத்து, மீண்டும் அனுமதி பெற்று ஆலையைத் திறப்பேன் என்று கூறியுள்ளார். எனவே நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற்று வந்தாலும், ஆலையை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கக்கூடாது.

மாநில அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளுக்கு நீதிமன்றம் தலையிட முடியாத வகையில் அரசு ஆணைபிறப்பிக்கவேண்டும். அதேபோல் ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கழிவுகளை அகற்றி சுத்தம்செய்யவேண்டும்.

மேலும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி தேமுதிக ஆரம்பத்தில் இருந்தே போராடியது, இது தேமுதிகவுக்கும், போராடிய மற்ற அனைத்துக் கட்சிகளுக்கும், பொதுமக்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறோம்.

எனவே இத்தனை உயிர்களை இழந்தபிறகும், இத்தனை கலவரங்கள் ஆன பிறகும், இப்பொழுதுதான் தூங்கிக்கொண்டிருந்து விழித்துக்கொண்டது போல அரசாங்கம் அறிவித்திற்கும் இந்த அறிவிப்பு என்பது, காலம்கடந்து செயலாக இருந்தாலும் ஒட்டுமொத்த மக்களும் வரவேற்கத்தக்கதாக தேமுதிக கருதுகிறது. எனவே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு ஆணை பிறப்பித்திருப்பதை தேமுதிக வரவேற்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response