திரிபுராவில் பாஜக வெற்றிபெற்றதையடுத்து பெலோனியா கல்லூரி சதுக்கத்தில் வைக்கப்பட்டிருந்த புரட்சியாளர் லெனின் சிலை அகற்றப்பட்டது.
இதையடுத்து, பாஜகவின் எச்.ராஜாவின் முகநூல் பக்கத்தில், “லெனின் யார்? அவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு? கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில் இன்று. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவெரா ராமசாமி சிலை”என நேற்று பதிவிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், எச்.ராஜா கருத்துக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். இதையடுத்து அப்பதிவு நீக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா, “ஈ.வெ.ராமசாமி சிலை குறித்த கருத்தை என்னுடைய அனுமதியில்லாமல், அட்மின் தான் முகநூலில் பதிந்தார். அப்பதிவு எனக்கு ஏற்புடையதல்ல. கட்சி நிகழ்ச்சிக்காக சென்னையிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் சென்றுகொண்டிருந்த போதுதான் அக்கருத்து பதியப்பட்டிருந்தது.
டெல்லி வந்திறங்கியவுடன் தான் பதிவை பார்த்தேன். உடனேயே அப்பதிவை நீக்கியதோடு மட்டுமல்லாமல், அட்மினையும் நீக்கிவிட்டேன்.
கொள்கைகளை மக்களிடம் நேரடியாக எடுத்துச்சென்று அவர்களுடைய ஆதரவை ப்பெறுவதில் தான் முழு நம்பிக்கை உடையவன். சிலைகளை உடைப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை.
இருப்பினும், எனக்குத் தெரியாமல் அட்மின் பதிவிட்ட கருத்துதான் என்றாலும், என்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்ததால், நான் எனது இதயபூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று எச்.ராஜா கூறினார்.
அதன்பின்,
தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் இந்நிகழ்வு குறித்து விடுத்துள்ள அறிக்கையில்….
லெனின், பெரியார் போன்ற தலைவர்கள் மனித குலத்திற்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்கள்.அவர்களை இழிவு செய்பவர்கள் யாராக இருந்தாலும் மன்னிக்கப்பட முடியாதவர்கள்.
பாஜக வைச் சேர்ந்த எச்.ராஜா மேற்கண்ட தலைவர்களை இழிவுபடுத்தியது மூலம் மக்களின் மன உணர்வுகளை ஆழமாகப் புண்படுத்தி உள்ளார்.கடும் எதிர்ப்பு எழுந்தவுடன் அதை மழுப்பும் வகையில் அவர் கூறிய பதில் ஏற்கத்தக்கதல்ல.
தமிழர்களின் உணர்வுகளை தொடர்ந்து அவமதிக்கும் வகையில் பேசிவரும் அச்.ராஜா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.