
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி ஒரு தமிழனின் வேதனை குரலாகவும் இந்திய அரசு தைரியமாக செயல்படாமல் இருப்பது பற்றியும் தைவான் நாட்டு சம்பவத்தை ஒப்பிட்டு வந்த வலைதல கட்டுரை.
“மே 9 , 2013, தைவானைச் சேர்ந்த ஹங் ஷி செங் என்ற மீனவர், பிலிப்பைன்ஸுக்கும், தைவானுக்கும் இடையில் உள்ள சர்வதேசக் கடல் எல்லையில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, பிலிப்பைன்ஸ் கடற்படையினரால் சுடப்படுகிறார்.
உடனே தைவானே கொந்தளிக்கிறது. முதலில் கண்டனம் தெரிவித்துவிட்டு, அந்த மீனவரைச் சுட்டுக்கொன்றதற்கு பிலிப்பைன்ஸ் பதில் சொல்லவேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆனால், அவர் எல்லை தாண்டியதால்தான் சுட்டோம் என்று பிலிப்பைன்ஸ் வாதாடுகிறது. அதற்கான ஆதாரங்களையும் காட்டுகிறது. பொத்தாம்பொதுவாக ஒரு மன்னிப்புக் கேட்கிறது. ஆனால் அதை தைவான் ஏற்காமல் பிலிப்பைன்ஸ் சொல்வது பொய் என்று மறுக்கிறது.
தைவான் ஒரு சிறப்புப் புலனாய்வுக்குழுவை அமைத்து, சுடப்பட்ட இடத்தை மில்லி மீட்டர் விடாமல் அளக்கிறது. சரியாக அந்த இடம் பிலிப்பைன்ஸின் கடல் எல்லைக்கு வெளியில் சர்வதேசக் கடல் எல்லையில் இருப்பதை புலனாய்வில் உறுதிப்படுத்துகிறது. பிலிப்பைன்ஸின் மீது பொருளாதாரத் தடை விதிக்கிறது.
முதலில் மறுத்த பிலிப்பைன்ஸ், பிறகு வழிக்கு வருகிறது. மீனவரைச் சுட்டதற்கும், பொய்யாக தடயங்களை அழித்து, மாற்றுத் தடயங்களை உருவாக்கியதற்கும் அந்த கப்பல் படையைச் சேர்ந்த நான்கு பேருக்கு வேலை பறிக்கப்படுகிறது. மேலும், பிலிப்பைன்ஸின் உயர் அதிகாரத் தூதர் ஒருவர் தைவானுக்கு வந்து சுடப்பட்ட மீனவரின் வீட்டிற்குச் சென்று பிலிப்பைன்ஸ் சார்பாக மன்னிப்புக் கேட்கிறார்.
அதற்குப்பிறகு எங்கள் உறவு சுமுகமாகிவிட்டது என்று பிலிப்பைன்ஸ் அறிக்கை கொடுக்கிறது.
இத்தனைக்கும், தைவான்(2கோடி மக்கள்தொகை), பிலிப்பைன்ஸை(10கோடி) விடச் சிறிய நாடு!
தன் ஒற்றை மீனவனைச் சுட்டதற்காக, ஓங்கி அடிக்க முயன்ற தைவான் தான், “தேசம்” என்ற சொல்லுக்கு அருகதையானது.
ஆனால்.. இங்கு என் தம்பி பிரிட்டோவைச் சுட்ட சிங்களவனுக்கு துப்பாக்கி கொடுத்ததே என் தேசம்தான் என்று மாரில் அடித்துகொண்டு அழப்பழகுவோம்.”


