
நடிகர் சிவகுமாரின் ஓவியநூல் வெளியீட்டு விழா அக்டோபர் 26 அன்று சென்னை லலித் கலா அகாடமியில் நடைபெற்றது. நடிகர் சூர்யா முன்னிலையில் தமிழருவிமணியன் புத்தகத்தை வெளியிட்டார்.
விழாவில் அல்லயன்ஸ் சீநிவாசன், இயக்குநர் லிங்கு சாமி , இயக்குநர் / ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் , இயக்குநர் வசந்த் , கவிஞர் அறிவுமதி , டாக்டர் சொக்கலிங்கம் , ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் , ஓவியர் தியாகு , நடிகை ரம்யா பாண்டியன் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லகண்ணு , கவிஞர் பிரபஞ்சன் , தனஞ்சயன் , கவிதாலயா கிருஷ்ணன் , பத்மஸ்ரீ சந்திர சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் கவிஞர் அறிவுமதி பேசும்போது,
பழைய சோற்றைப் பிழிந்து சுண்டிப்போன குழம்பை ஊற்றி ஊட்டிவிட்ட அந்தத் தாயின் விரல்களே உங்கள் தூரிகை விரல்களாக மாறியதாகவே நினைக்கிறேன். கொங்கு மண், மழையால் நனைந்து வேளாண்மை பார்த்த வாழ்வில்லை. அது உடலுழைப்பின் வியர்வையால் நனைத்து வேளாண்மை செய்த வாழ்க்கை. அந்த வாழ்க்கையிலிருந்து விளைந்தவர்தான் நீங்கள்.
மக்களைப் பண்படுத்துவதற்காக உழைத்த தலைவர்களை கறுப்பு வெள்ளை ஓவியங்களாகவும் மண்ணைப் பண்படுத்த உழைத்த மக்களை வண்ண ஓவியங்களாகவும் வரைந்து வெற்றி செய்திருக்கிற காட்சிகள்.. பழந்தமிழ் உளிகளால் பெருமை பெற்ற வரலாற்று அழகுகளை தம் தூரிகைகளால் அழகு செய்திருக்கிற உங்கள் விரல்களுக்கு உலகத்தமிழர்கள் சார்பாக நன்றி செலுத்துகிறேன் என்றார்.
விழாவில் நடிகர் சூர்யா பேசும்போது,
அப்பாவிற்கு எப்போதும் பிறந்த நாள் கொண்டாடுவது பிடிக்காது. சென்ற வருடம் பிறந்த நாள் கொண்டாடலாம் என்று நினைத்தோம் ஆனால் அவர் பழநி முருகன் கோவிலுக்கு சாமியை தரிசிக்கச் சென்றுவிட்டார். இந்த வருடம் அவருடைய 75வது பிறந்த நாள். இந்த பிறந்த நாள் அவருக்கு மிகச்சிறப்பான பிறந்த நாள். இந்த நாளை நாங்கள் கண்டிப்பாக மிகப்பெரிய அளவில் அனைவருக்கும் என்றும் நினைவிருக்கும் பிறந்தநாளாக மாற்ற வேண்டும் என்று யோசித்து இந்த கண்காட்சியை ஏற்ப்பாடு செய்தோம். கண்காட்சிக்கு இப்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கண்காட்சிக்கு கிடைத்துள்ள வரவேற்பை கருத்தில் கொண்டு மேலும் இரண்டு நாட்கள் கண்காட்சியை தொடர முடிவு செய்துள்ளோம்.இந்த காபி டேபிள் புத்தகம் மிக முக்கியமான புத்தகம் , இந்நாளை குறிக்க இந்த புத்தகத்தை இன்று வெளியிட்டு உள்ளோம். இராமாயணம் , மகாபாரதத்துக்குப் பிறகு இப்போது திருக்குறளைப் பேசத் தயாராகி வருகிறார். இனி வருடம் தோறும் அப்பாவின் பிறந்த நாள் அன்று ஓவியப் போட்டி ஒன்றை நடத்தி அதில் வெற்றி பெறுபவருக்கு பரிசு வழங்கப்படும் என்றார்.
ஏற்புரை வழங்கிய சிவகுமார்,
எனக்கு என்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுவதில் விருப்பமே இல்லை. இவர்கள் தான் இந்த ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். படைப்பாளனை விட படைப்புகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனென்றால் படைப்புகள் தான் காலம் கடந்து நிற்கும். இப்போது அனைவரும் 5 நட்சத்திர ஹோட்டல்களில் பல ஆயிரம் ருபாய் செலவழித்து சாப்பிடுகிறார்கள். நானெல்லாம் அக்காலத்தில் வெறும் ஏழாயிரம் ரூபாய் செலவில் திருச்சியில் இருந்து கன்னியாக்குமரி வரை பயணித்து வரைந்தேன். இப்போதெல்லாம் அப்படி இருக்க முடியாது. இந்த விழாவை இவ்வளவு சிறப்பாக நடத்திய என்னுடைய மகன்கள் மற்றும் இன்னொரு மகனான தனஞ்ஜெயனுக்கு நன்றி என்று கூறினார்.


