
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகம், கூட்டணி, கட்சிப் பணிகள் குறித்து பாஜக மாநில நிர்வாகிகளுடன் தலைவர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். தமிழ்நாடு பாஜக சார்பில் மாநில அமைப்பு செயல்பாட்டுப் பயிற்சி முகாம் சென்னையில் நேற்று நடந்தது.
இதற்கு அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமை தாங்கினார்.தமிழ்நாடு தலைவர்
நயினார் நாகேந்திரன்,ஒன்றிய இணைஅமைச்சர் எல்.முருகன், மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன்,
முன்னாள் தமிழ்நாடு தலைவர்கள் பொன்.இராதாகிருஷ்ணன், தமிழிசை, அண்ணாமலை, தேசிய செயற்குழு
உறுப்பினர் எச்.ராஜா, தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் உட்பட புதிதாக நியமிக்கப்பட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் சட்டப்பேரவைத் தேர்தல் வியூகம், கூட்டணி, களப்பணி தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை
தலைவர்கள் வழங்கினர். அதிமுக – பாஜக கூட்டணியைப் பலப்படுத்துவது, தோழமைக் கட்சிகளான பாமக,
தேமுதிகவை கூட்டணியில் நீடிக்க செய்வதற்கான அணுகுமுறைகள், சமூக ஊடகங்களை திறம்பட எவ்வாறு பயன்படுத்துவது, ஒன்றிய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வது என்பது உள்ளிட்ட வழிகாட்டுதல்களை வழங்கினர்.
மேலும், கடந்த காலக் கசப்புகளை மறந்து அதிமுக – பாஜக கூட்டணியை வெற்றிப் பாதைக்குக் கொண்டு செல்ல உழைக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் பேசும்போது, கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் (ஓபிஎஸ்) மீண்டும் நம் கூட்டணியில் இணைவார்கள். விரைவில் தமிழ்நாடு வரும் பிரதமர் அதனைச் செய்து காட்டுவார் என அவர் பேசியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே பி.எல்.சந்தோஷ் – ஓபிஎஸ் சந்திப்புக்கு பாஜக தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக அவருடன் பாஜகவினர் தொலைபேசியில் பேசியிருந்தனர். ஆனால், ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் பேசி
முடிவெடுப்பதாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று அவர்களது சந்திப்பு எதுவும் நடக்கவில்லை.அதற்குக் காரணம், அமித்ஷாவையும் மோடியையும் சந்திக்க நேரம் கேட்டும் கொடுக்கவில்லை என்பதால்தான் கூட்டணியிலிருந்து வெளியேறினோம்.இப்போது பி.எல்.சந்தோசை சந்திக்க அழைப்பு விடுக்கின்றனர்.இதை ஏற்கக் கூடாது என்பது ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களின் நிலைப்பாடாக இருந்திருக்கிறது.
இந்தத் தகவல் பி.எல்.சந்தோசுக்குத் தெரிவிக்கப்பட்டது என்றும் அதற்கு,ஆகஸ்ட் 26 ஆம் தேதி மோடி தமிழ்நாடு
வரும்போது ஓபிஎஸ்ஸை சந்திக்க வைப்போம் என்று அவர் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
எப்படியாவது ஓபிஎஸை, மீண்டும் கூட்டணியில் இணைக்க முயற்சிகள் நடைபெற்று
வருவதாகவும் பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.


