பெரியார் பசுமை வனம் – சேலம் பெரியார் பல்கலையின் நன்முயற்சி

சேலம், பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு அரசின் வனத்துறை இணைந்து 4.5 ஏக்கர் பரப்பளவில் 500 மரக்கன்றுகளை நட்டுப் ‘பெரியார் பசுமை வனம்’ உருவாக்கும் நிகழ்வு 22.07.2025, செவ்வாய்க்கிழமையன்று பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

சேலம், பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் மொத்தம் 7,700 மரங்கள் உள்ளன. மியா வாக்கி காடு வளர்ப்புத் திட்டத்தில் மட்டும் 4,400 மரங்கள் நடப்பட்டுள்ளன. மேலும், மாணவர்கள் பயன்பெறும் விதமாக மருத்துவக் குணங்கள் மிக்க மூலிகைத் தோட்டமும் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

அழகுச் செடிகள் வளர்ப்புத் தோட்டம், பசுமைக் குடில், மண்புழு உரம் தயாரிப்புக் குடில் ஆகியனவும் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளன.

குறிப்பாக நூலகத்திற்கு அருகில் மூங்கில் தோட்டத்திற்கு நடுவே உயிர்வாயுப் பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தூய்மையான காற்றைச் சுவாசிப்பதற்கு இப்பூங்கா பயனுள்ளதாக உள்ளது.

இங்கு மாணவர்கள் அமர்ந்து நூல்களையும் செய்தித்தாள்களையும் வாசிப்பதற்கு ஏதுவாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தற்போது சேலம், பெரியார் பல்கலைக்கழகமும், தமிழ்நாடு அரசின் வனத்துறையும் இணைந்து முத்தமிழறிஞர் கலைஞர் ஆய்வு மையம் அருகில் 4.5 ஏக்கர் பரப்பளவில் 500 மரக்கன்றுகளை நட்டுப் ‘பெரியார் பசுமை வனம்’ உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான தொடக்க நிகழ்வு 22.07.2025, செவ்வாய்க்கிழமையன்று பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் வை.ராஜ் வரவேற்புரை வழங்கினார்.

துணைவேந்தர் நிருவாகக் குழு உறுப்பினரான பேராசிரியர் இரா.சுப்பிரமணி தலைமையுரையாற்றுகையில்,

“இந்திய அளவில் காடுகளை வளர்த்தல் 33 விழுக்காட்டுடன் கூடிய இலக்கைக் கொண்டுள்ளது. பெரியார் பல்கலைக்கழகத்திலுள்ள 95 ஏக்கர் நிலப்பரப்பில் 22 விழுக்காட்டு நிலப்பரப்பு மரங்களால் நிரம்பியுள்ளது. தற்போது ‘பெரியார் பசுமை வனம்’ 4.5 ஏக்கர் நிலப்பரப்பில் 500 மரக்கன்றுகளால் அமையவுள்ளது. இதனால் 26 விழுக்காடாக பல்கலைக்கழகத்தின் காடு வளர்ப்பு உயரவுள்ளது. மாணவர்கள் தாங்கள் நட்டுவைத்த மரங்களை நாள்தோறும் பராமரிக்க வேண்டும். மரங்களை வளர்ப்பதில் மாணவர்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்படின் பல்கலைக்கழக நிர்வாகம் அதை உடனடியாக நிறைவேற்றித் தரும்” என்று கூறினார்.

மாவட்ட வன அலுவலர்காஷ்யப் ஷஷாங்க் ரவி இ.வ.ப. அவர்கள் மரக்கன்றுகளை நட்டு நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

அவர் உரையாற்றுகையில்,

“மரங்களை நடுதல் என்பது காடுகளை வளர்ப்பதோடு பல்லுயிர் பெருக்கத்திற்கும் அவசியமாகிறது.மாணவர்கள் படித்து முடித்த பிறகும் தாங்கள் நட்டுவைத்த மரங்களைக் கடந்துசெல்லும் போது ஒரு பெரும் உள்ளுணர்ச்சியைப் பெறமுடியும்.காலநிலை மாற்றத்தைத் தடுக்கவும் காடு வளர்ப்பு அவசியமாகிறது.” என்றார்.

இந்நிகழ்வில் துணைவேந்தர் நிருவாகக் குழு உறுப்பினர் முனைவர் சொ.ஜெயந்தி முன்னிலை வகித்தார்.

நிறைவாக, வளாகப் பராமரிப்புப் பிரிவின் இணை இயக்குநரான முனைவர் த.அருள்பாலச்சந்திரன் நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளைச் சார்ந்த துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள்,அலுவல்நிலைப் பணியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்.

புவி வெப்பமயமாதலும் அதன் கொடும் விளைவுகளும் பூமியைப் பெரிதும் பாதித்து அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இக்காலகட்டத்தில் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி புவியைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியிருப்பது பெரும் வரவேற்புக்குரியது. அனைவரும் பின்பற்றக் கூடியதும் ஆகும்.

Leave a Response