அதானிக்காக பாக் எல்லைப் பாதுகாப்பு விதிகளில் திருத்தம் – வெளியான அதிர்ச்சித் தகவல்

இந்திய ஒன்றியத்தின் மிகப் பெரிய தொழிலதிபர், உலக செல்வந்தர்களில் ஒருவர் இவை எல்லாவற்றிற்கும் மேலாக பிரதமர் மோடியின் நண்பர் என்கிற அடையாளம் ஆகிய செல்வாக்குகளோடு இருப்பவர் கெளதம் அதானி.

இவர், குஜராத் மாநிலம் கவ்டாவில் உலகின் மிகப்பெரிய சூரிய மின் சக்தி ஆலையை உருவாக்கி வருகிறார். கடந்த 4 ஆண்டுகளாக இதற்கான பணிகள் நடைபெற்று வந்தாலும் அண்மையில், இந்த சூரிய சக்தி மின் பூங்காவுக்காக அமெரிக்க முதலீட்டாளர்களிடம் இருந்து ஒப்பந்தங்களைப் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,100 கோடி இலஞ்சம் வழங்கியதாக நியூயார்க் ஃபெடரல் நீதிமன்றம் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்ததன் மூலம் இந்த விவகாரம் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது.

இந்த நிலையில் அதானியின் நிறுவனம் இலாபம் ஈட்டுவதற்காக பாகிஸ்தான் உடனான எல்லைப் பாதுகாப்பு விதிகளில் ஒன்றிய அரசு திருத்தம் செய்து இருப்பது தற்போது அம்பலம் ஆகி உள்ளது.

எல்லைப் பாதுகாப்பு விதிகளின் படி, பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 கிமீ வரையும் எவ்வித கட்டுமானத்திற்கும் அனுமதி இல்லாமல் இருந்தது. ஆனால் குஜராத்தில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு மூலம் பாகிஸ்தான் எல்லையில் இருந்து 1 கிமீ வரை சூரிய மின் தகடுகள், காற்றாலைகளை அமைக்கும் வகையில், 2023 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதி எல்லைப் பாதுகாப்பு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. இதனால் எல்லையில் பீரங்கிகள் ரோந்து செல்வதற்கும், எல்லையைக் கண்காணிப்பதற்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற இந்திய இராணுவ அதிகாரிகளின் அச்சமும் புறந்தள்ளப்பட்டுள்ளது.

ஹிண்டன்பெர்க் அறிக்கை, நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் என அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் கெளதம் அதானிக்காக நாட்டின் பாதுகாப்பிலும் பாஜக அரசு, சமரசம் செய்து இருக்கிறது என்கிற தகவல் அனைத்துத் தரப்பினரிடமும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Response