வன்முறைப் பேச்சுக்காக எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? – ஜெ அரசுக்கு கி.வீரமணி கேள்வி

பா ச கவைச் சேர்ந்த  எச். ராஜாவின் வன்முறைப் பேச்சுமீது காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன் – உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் எப்போதும் நாத்துடுக்குடனும், ஆபாச அருவருப்புகளையே தனது வாயிலிருந்து ஆணவத்தோடும் வெளியிடும் ஒரு நபர் – பா.ஜ.க.வைச் சேர்ந்த எச். ராஜா. முன்பே பல முறை அவதூறு விளைவிக்கும் சட்ட விரோதப் பேச்சுகளை பகிரங்கமாகப் பேசியதைக் குறித்து, திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி போன்ற அமைப்புகள், காவல்துறையிடம் புகார் கொடுத்தும், அவற்றின்மீது நடவடிக்கை எடுக்க ஏனோ, தமிழ்நாடு காவல்துறை தயக்கம் காட்டி வருகிறது!

அதே நபர், இன்று தன்னை மிகப் பெரிய ‘24 கேரட் தேச பக்த திலகமாக’ எண்ணிக் கொண்டு, ஜே.என்.யு. பல்கலைக் கழக மாணவர் போராட்டங்கள் குறித்து, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தேசிய செயலாளர் தோழர் டி. இராஜா அவர்களின் மகள் குறித்து பகிரங்கமாக வன்முறைப் பேச்சு பேசியுள்ளார்.

“டி. ராஜா அவர் மகளைத் துப்பாக்கியில் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும்” என்று பேசியுள்ளார் என்பது, ஜனநாயக நாட்டில் ஆளும் கட்சியாக உள்ளவர் பேசும் பேச்சு என்றால், அவருக்கு உள்ள பின்புலம் என்ன? சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டாமா?

தரமான விமர்சனங்கள் செய்வதுதானே அரசியல் நாகரிகம்? காந்தியாரைக் கொன்ற கோட்சே கும்பலைச் சேர்ந்தவர்களிடம் இதை எதிர்பார்ப்பது நியாய மில்லைதான்.

என்றாலும் சட்டம் வேடிக்கை பார்க்கலாமா?

திராவிடர் கழகம் வன்மையாக இதனைக் கண்டிக் கிறது.

மற்றவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் தமிழக காவல்துறை, இந்த வன்முறைப் பேச்சுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டாமா?


கி.வீரமணி
தலைவர்,    திராவிடர் கழகம்

23.2.2016
சென்னை

Leave a Response