நிர்மலா சீதாராமன் யாரிடம் கூடுதல்நிதி கொடுத்தார்? – சீமான் கேள்வி

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.அப்போது அவர் கூறியதாவது…..

மாநில அரசுகள் கொடுக்கும் நிதியில் தான் ஒன்றிய அரசு இயங்குகிறது. ஒன்றிய அரசுக்கென்று தனி வருவாய் கிடையாது.கூடுதல் நிதி கொடுத்திருப்பதாகக் கூறும் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதியை யாரிடம் எப்போது கொடுத்தார்? தமிழ்நாட்டு மக்கள் செலுத்தும் வரியை எடுத்துக்கொண்டு அதை எங்களுக்கே பிரித்துக் கொடுப்பதாகக் கூறுவதா?. தமிழ்நாட்டு மக்கள் செலுத்தும் வரியை வைத்து ஒன்றிய அரசு நிர்வாகம் செய்யத் தெரியாதா?

இந்தி பேசுபவர்களை மட்டும் இந்தியர்களாக நினைத்தால் மற்றவர்கள் என்ன ஆவார்கள்? குஜராத், பீகார், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பேரிடர் காலங்களில் உடனே பார்வையிட்டு நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு அறிவிக்கிறது.ஆனால், தமிழ்நாட்டு மக்கள் மட்டும் பேரிடர் காலங்களில் கூட நிவாரணத் தொகை பெற யாசகம் பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

பிரதமர் மோடியால் திருச்சி விமான நிலைய புதிய முனையத்தைத் திறந்து வைக்க வர முடிந்தது, தூத்துக்குடிக்கு வர முடியவில்லை. புகைப்படங்களை மட்டும் பார்த்துவிட்டு வெள்ளப் பாதிப்பை பார்வையிட்டதாகக் கூறுகிறார் ஒன்றிய அமைச்சர். வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், இமெயில்,டிவிட்டர் போன்றவைகளிலேயே புகைப்படங்களை ஒன்றிய அமைச்சர் பார்வையிட்டிருக்கலாமே.இந்த நிலை கண்டனத்துக்குரியது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response