தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் தொடரும் சிக்கல் – விவரம்

ஆகஸ்ட் 2021 இல் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக திரைக்கலைஞர் வாகை சந்திரசேகர் நியமிக்கப்பட்டார்.அப்போதே உறுப்பினர் செயலராக டி.சோமசுந்தரம் என்பவர் நியமிக்கப்பட்டார்.

இவர்களில் டி.சோமசுந்தரம் நியமனத்துக்குக் கடும் எதிர்ப்பு வந்தது. இவர், அதிமுக ஆட்சிக் காலத்தில் தகுதியற்றவர்களிடம் கையூட்டுப் பெற்றுக்கொண்டு கலைமாமணி விருதுக்கு பரிந்துரைத்துள்ளார். நாட்டுப்புறக் கலைஞர் கோவிந்தராஜ் கையூட்டு கொடுக்க மறுத்ததால், மரக்காலாட்டம் என்ற ஒரு கலையே இல்லை என்று மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அதிகாரிகளின் பலவீனத்தைப் பயன்படுத்தி தவறான செயல்களில் ஈடுபட்டு வநதார். சாதிய, மத அமைப்புகளில் உறுப்பினராக உள்ளதோடு, கலைஞர்களிடம் வன்மத்தோடு செயல்பட்டு வருகிறார். அதிமுக, பாஜகவின் கைக்கூலியாகச் செயல்பட்டு வருபவருக்கு உறுப்பினர் செயலர் வழங்கியதை ஏற்க முடியாது.சோமசுந்தரம் நியமனத்தை இரத்து செய்யவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது.

அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மாற்று ஊடக மையம் மற்றும் அனைத்துக் கலைஞர்கள் வாழ்வாதாரக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து செப்டம்பர் 2021 இல் சோமசுந்தரம் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

அண்மையில், இயல் இசை நாடக மன்றத்தின் புதிய நிர்வாகக்குழு மற்றும் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள்.

இந்தக் குழுக்களில் நீக்கப்பட்ட டி.சோமசுந்தரத்தின் ஆதரவாளர்கள் நிறைந்திருக்கிறார்கள். இது ஏற்கத்தக்கதல்ல என்று மாற்று ஊடக மையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாற்று ஊடகமையத் தலைவர் பேராசிரியர் இரா.காளீசுவரன் கூறியதாவது…..

தமிழ்நாட்டில் சுமார் 7 இலட்சம் நாட்டுப்புறக் கலைஞர்கள் உள்ளனர். ஆனால் வாரியத்தில் சுமார் 40 ஆயிரம் பேர்தான் உறுப்பினர்களாக உள்ளனர்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் 2 இலட்சம் ரூபாய்க்கு கலைமாமணி விருதுகள் விற்கப்பட்டன. அதற்கு தரகராக இருந்தவர் சோமசுந்தரம். கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கையூட்டு தராததால் அந்த விருதையே சோமசுந்தரம் நிறுத்தி வைத்தார். தருமபுரியில் 100 நாட்கள் தெருக் கூத்து கலைஞர்களை வைத்து நிகழ்ச்சி நடத்திவிட்டு, அவர்களுக்கு உதவித் தொகையை தராமல் ஏமாற்றினார்.கலைஞர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தை அதிமுக ஆட்சியில் முடக்கியவர் சோமசுந்தரம்.

இத்தகைய தவறான நபர் அரசின் திட்டங்களை நாட்டுப்புறக் கலைஞர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டிய இடத்தில் அமர்த்தப்பட்டார்.

நாங்கள் போராட்டம் நடத்தி அவரை அகற்றினோம்.

ஆனாலும் மன்றத்தில் அவருடைய ஆதிக்கம் தொடருகிறது. பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் அவருடைய ஆதரவாளர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது ஏற்கத்தக்கதன்று.இதற்கு உரியவர்களிம் உரியமுறையில் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளோம்.சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

Leave a Response