ஒரு கவுண்டர் சமூகக் கட்சி ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு – எடப்பாடி பலவீனம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தனித்தனி அணிகளாகக் களமிறங்குகின்றனர். இந்தச் சூழ்நிலையில், அதிமுக கூட்டணியில் 2 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றவர் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு. இவர், கிரீன்ஸ்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு நேற்று சென்று தனது ஆதரவைத் தெரிவித்தார்.

பின்னர் வெளியில் வந்த தனியரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது……

அதிமுக நலன் கருதி, தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி இந்த இரட்டைத் தலைமை, இன்னும் பிரிந்து சென்ற சசிகலா, டிடிவி இவர்களை ஒருங்கிணைக்க முயற்சிப்பதற்காக நாங்கள் எல்லாம் காத்திருக்கிறோம். ஆனால், அதிமுகவில் இருந்த இரட்டைத் தலைமையிலும் இப்படி ஒரு பிரிவு, சிக்கல் வருவது அதிமுகவுக்கு மீண்டும் சரிவைத் தரும். அது நாட்டு மக்களின் நம்பிக்கை, ஆதரவை இன்னும் பலவீனப்படுத்தும் என்ற அடிப்படையில் தான் ஒபிஎஸ்சை சந்தித்துப் பேசினேன்.

அவர் என்னிடம் கூறும்போது, ‘இந்த முறை நான் உறுதியாக இருக்கிறேன்.அதிமுக ஒற்றுமைக்காக ஒற்றைத் தலைமை என்கிற முழக்கத்துக்கு நான் எப்போதும் இசைவு தெரிவிக்க மாட்டேன்’ என்றார்.

எனவே, இந்த பிரச்னை சம்பந்தமாக நான் சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோரைச் சந்தித்துப் பேச உள்ளேன். இப்போதும் ஓபிஎஸ் பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்தால், எடப்பாடி பழனிசாமியின் சர்வாதிகாரப் போக்கு அதிமுகவை வலிமை இழக்கச் செய்துவிடும்.பழிவாங்கும் போக்கு, சதி செய்கிற சூழ்ச்சி செய்கிற நேர்மையற்ற தன்மை தான் எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கிறது. எனவே எடப்பாடி பழனிச்சாமி ஒற்றைத் தலைமையாக உருவெடுப்பது அதிமுகவுக்கு நல்லதல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு கவுண்டர் சமூகத்தின் ஆதரவு முழுமையாக உள்ளது, அதுவே அவருடைய பலம் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கவுண்டர் சமூகத்துக்காகவே கட்சி நடத்துவதாகச் சொல்லும் தனியரசு, எடப்பாடிக்கு எதிராகத் திரும்பியிருப்பது அவருக்குப் பலவீனம் என்கிறார்கள்.

Leave a Response