பொங்கல் பரிசுத் தொகுப்பில் மேலும் 5 பொருட்கள் சேர்க்க சிபிஎம் கோரிக்கை

2023 பொங்கல் திருநாளுக்காக ரூ 1000 மற்றும் ஒரு கிலோ பச்சரிசி,ஒரு கிலோ சர்க்கரை வழங்குவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அதோடு கரும்பு மற்றும் வெல்லம் சேர்த்து வழங்க இந்திய பொதுவுடைமைக் கட்சி மார்க்சிஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது.

அக்கட்சி சார்பாக முதலமைச்சருக்கு அனுப்பபட்டுள்ள கடிதம்…..

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தாண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் ரூ.1000 ரொக்கப் பணம், பச்சரிசி, சர்க்கரை அடங்கிய தொகுப்பினை தமிழக அரசு அறிவித்துள்ளதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வரவேற்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பும் சேர்த்து வழங்கப்பட்டு வந்தது. இதனால் பொங்கல் பண்டிகைக்காகவே விளைவிக்கப்படும் செங்கரும்புக்கு கட்டுப்படியான விலை கிடைத்து வந்தததால் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்து வந்தனர்.

இந்த ஆண்டும் தமிழக அரசு கரும்பைக் கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் மாநிலம் முழுவதும் கரும்பு விவசாயிகள் கூடுதலான பரப்பளவில் கரும்பை விளைவித்துள்ளனர்.

ஆனால் தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாததால் கரும்பு விவசாயிகள் பெருத்த ஏமாற்றமடைந்துள்ளதுடன், விளைவித்த கரும்பின் விலை வீழ்ச்சியடைந்து மிகப் பெரிய இழப்பு ஏற்படும் என ஆழ்ந்த கவலையில் மூழ்கியுள்ளனர்.

அதுபோல், பொங்கல் பரிசுத் தொகுப்பில் வெல்லம் இடம்பெறும் என்ற நம்பிக்கையிலிருந்த வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும், உற்பத்தியாளர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதுபோல், கடந்த ஆண்டுகளில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்டு வந்துள்ள ஏலக்காய், முந்திரி, நெய், வெல்லம், கரும்பு போன்றவைகளும் வழங்கப்பட வேண்டுமென பொதுமக்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பும் உள்ளது.

எனவே, தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு, வெல்லம் மற்றும் கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்ட முந்திரி, ஏலக்காய், நெய் போன்ற பொருட்களையும் சேர்த்துத் தரமான முறையில் வழங்கிடவும், கரும்பை விவசாயிகளிடமும், வெல்லத்தை உற்பத்தியாளர்களிடமும் நேரிடையாகக் கொள்முதல் செய்திடவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கைகள் எடுக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இதன் மூலம் கரும்பு விவசாயிகளும், வெல்லம் உற்பத்தியாளர்களும் பெரிதும் மகிழ்ச்சியடைவதுடன் பொதுமக்களும் பயனடைவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response