திருமாவளவன் தலைமையை ஏற்கத்தயார் – ப.சிதம்பரம் அறிவிப்பு

கோவை மாவட்டம் சிவானந்தாகாலனி பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மணிவிழா நடைபெற்றது.

அதில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா , தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர்.

நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்,

போராடிப் போராடி அனைத்துத் தடைகளையும் உடைத்து நாடாளுமன்றத்தில் அரியாசானம் போட்டு அமர்ந்துள்ளார். நூற்றாண்டு காலம் திருமா வாழ வாழ்த்துகிறேன். வி.சி.க கட்சியின் தொண்டர்களுக்கு நான் சொல்வது திருமாவின் கொள்கைகளைக் கடைசி வரை பின்பற்ற வேண்டும்.

75 ஆண்டு காலம் சுதந்திரம் தினம் கொண்டாடுகிறோம். ஆனால், முழுமையாக 130 கோடி மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. பல பேர் பேசவும் எழுதவும், போராடவும் சுதந்திரம் இல்லை. உணவு, இருப்பிடம் போன்றவையிலும் சுதந்திரம் கிடைக்கவில்லை. பழங்குடியினர், சிறுபான்மையினருக்கு இன்னும் முழு சுதந்திரம் கிடைக்கவில்லை. அமெரிக்காவில் கருப்பின மக்கள் 200 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி வருகின்றனர்.

நம்முடைய நாட்டில் என்னுடைய வாழ்நாளுக்குப் பிறகு இந்தப் போராட்டம் இருக்கும். இந்தியா முழுவதும் விவாதம் நடைபெற்று வருகிறது. அதை இந்த மேடையில் தவிர்க்க முடியாது.

மனுஸ்மிருதியை எதிர்ப்பதாக அம்பேத்கர் அடித்துச் சொன்னார். அமெரிக்கா, இலண்டன் உள்ளிட்ட உலக அரங்கிலும் உடைத்துச் சொன்னவர் அம்பேத்கர். இந்தியாவில் இருக்கக் கூடிய இந்து மதம் பல மாடிக் கட்டிடம். ஆனால் ஒரு மாடியில் இருந்து இன்னொரு மாடிக்குப் போக முடியாது. இதுபோன்ற வேறுபாடு எந்த மதத்திலும் கிடையாது.

இந்தியாவில் இருக்கும் மத பேதங்கள் எந்த நாட்டிலும் இல்லை. இதை உடைத்து எறியத்தான் வாழ்நாள் முழுவதும் அம்பேத்கர் போராடினார். சனாதானத்தை ஆதரிப்பவர்களை எதிர்த்துப் போராட வேண்டும். அவர்கள் நமக்கான சவால். மகாத்மா காந்தி சனாதனத்தைப் பேசுனதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை, அதை அம்பேத்கரும் ஏற்றுக்கொள்ளவில்லை. மனுஸ்மிருதி பற்றிய விவாதம் 80 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

அண்ணாமலைக்கும், திமுக இராசாவிற்கும் இடையே நடக்கும் விவாதம் மட்டும் இல்லை. எல்லா மனிதருக்கும் ஒரே மாதிரியான மதிப்பு இன்னும் இந்தியாவில் கிடைக்கவில்லை. அது கிடைக்கும் வரைக்கும் போராட்டம் தொடரும் என்றார். கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி பெரியார் உணவகத்தை எப்படி திறக்கலாம் என கலவரத்தை நடத்தியுள்ளனர். இளைஞர்கள் பலர் காவிக் கொடியைத் தூக்கிக்கொண்டு செல்வது அறிந்தேன்.

உணவகத்தை அடித்து நொறுக்கியதைப் பார்த்து வேதனை அடைந்தேன். சனாதனத்தை ஏற்றுக் கொள்ளும் இளைஞர்களைப் பார்த்து பரிதாபப்படுகிறேன். இந்த மண் திராவிடமும், தேசியமும் கலந்த மண் இது. ஆதிக்க உணர்வுகளையும், சக்திகளையும் அழிக்கப் போராட வேண்டும்.

காந்தியை மதிக்கிறேன், ஆனால் சனாதன கருத்தை ஒருபோதும் ஏற்க மாட்டேன். ஏற்றத் தாழ்வுகளைக் கடுமையாக எதிர்க்கிறேன். சாதி ஒழிய வேண்டும். தடையாகவும், சுவராகவும் சாதி உள்ளது. சாதி ஒழிந்தால் தான் சனாதனம் ஒழிக்க முடியும். சனாதனத்தை ஒழிக்கும் போராட்டத்தில் திருமாவின் தலைமையில் செல்லத் தயார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response