முடிந்தது இராஜபக்சேக்கள் ஆட்டம் – அமெரிக்காவிலும் கோத்தபய மகன் வீட்டில் தாக்குதல்

கடந்த 20 ஆண்டு காலம் இலங்கையை இராஜபக்சே குடும்பம் ஆட்டிப் படைத்தது. 2005 இல் அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு, 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட உள்நாட்டுப் போரில் இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்து விடுதலைப் புலிகளுக்கு முடிவு கட்டியது. இதனால், இராஜபக்சேக்கள் சிங்களர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றனர்.

2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரை மைத்ரிபால சிறிசேனா ஆட்சி அமைந்த போது, சற்று அடங்கியிருந்த இராஜபக்சே குடும்பம், 2019 ஆம் ஆண்டு மீண்டும் தலைதூக்கியது. 60 சதவீத பெரும்பான்மையுடன், 2019 இல் அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றதைத் தொடர்ந்து, அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே பிரதமர் ஆனார். மற்றொரு சகோதரர் பசில் ராஜபக்சே நிதி அமைச்சர் ஆனார். ஒட்டுமொத்த அதிகாரமும் தனக்கே வேண்டும் என்பதற்காக அதிபர் கோத்தபய அரசியலமைப்புச் சட்டத்திலும் திருத்தம் செய்தார். இராஜபக்சே சகோதரர்களின் தவறான கொள்கைகளால் இன்று இலங்கையின் பொருளாதாரம் முடங்கிப் போய், நாடே செயலற்றுக் கிடக்கிறது.

இதன் காரணமாக வெடித்த மக்கள் புரட்சியில், பதவியேற்ற 30 மாதத்தில் இராஜபக்சேக்களுக்கு இலங்கை மக்கள் முடிவுரை எழுதி உள்ளனர். முதலில் பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சேவை விரட்டி அடித்த பொதுமக்கள், தற்போது அதிபர் மாளிகையைக் கைப்பற்றி, கோத்தபயவின் பதவியையும் பறித்துள்ளனர். உயிர் பிழைத்தால் போதும் என்ற அளவுக்கு அவர்கள் தப்பியோடினர். இதனால், இனிமேல் எந்தக்காலத்திலும் இராஜபக்சேக்கள் இலங்கை அரசியலில் அடியெடுத்து வைக்க முடியாது என்கின்றனர் இலங்கையின் அரசியல் நிபுணர்கள்.

கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான குசல் பெரேரா கூறியதாவது…….

இராஜபக்சே குடும்பத்தில் கோத்தபய, மகிந்த, பசில் சகோதரர்கள் முக்கியமானவர்கள். மகிந்தாவின் மகன் நமல் மற்றும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சேவின் மகன் ஷஷீந்திர ராஜபக்சே ஆகியோர் எதிர்கால வாரிசுகளாக உள்ளனர். இதில், கோத்தபய தான் சக்தி வாய்ந்தவர். இவர், வழக்கமான அரசியல்வாதி அல்ல. எப்போதும் தனது சகோதரர் மகிந்த ராஜபக்சேவை முன்னிருத்தி, அதிகாரத்தை மட்டும் தன் கையில் வைத்திருப்பார். கோத்தபயவின் பலமே மக்களிடம் அவருக்கு உள்ள ஆதரவுதான். தற்போது இது சுக்குநூறாக உடைந்து விட்டது. அவர் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் இலங்கையில் போராட்டங்கள் தீவிரமடையும் என்பதை கோத்தபய உணர்ந்துள்ளார்.

எனவே, நிச்சயம் அவர் அதிபர் பதவியிலிருந்து விலகியே தீருவார். அதில் எந்த தந்திரமும் செய்ய முடியாது. சொந்த ஊழியர்கள் கூட அவர் பக்கம் நிற்க மாட்டார்கள். எனவே, அவர் மீண்டும் ஒருமுறை அதிபராக பதவியேற்க வாய்ப்பே இல்லை. மகிந்த ராஜபக்சேவைப் பொறுத்த வரையில், உடல் ரீதியாக பலவீனமாகி விட்டார். சிங்களர்களிடம் அவருக்கு இருந்த செல்வாக்கு அடியோடு அழிந்து விட்டது. எனவே, அரசியல் ரீதியாக அவர் முன்பு இருந்த அதே சக்திவாய்ந்த, கவர்ச்சிகரமான தலைவராக இருக்க வாய்ப்பில்லை. அலரி மாளிகையில் இருந்து மக்களால் விரட்டி அடிக்கப்பட்ட பிறகு அவர் மீண்டும் அரசியலைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

பசில் ராஜபக்சே சிறந்த நிர்வாகி. 2015க்குப் பிறகு மீண்டும் கட்சியை ஆட்சிக் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றினார். ஆனால், மகிந்தாவை வைத்துதான் இவரது அரசியல். தனிப்பட்ட முறையில் பசிலுக்கு எந்த சக்தியும் இல்லை. இலங்கை அரசியலில் அவருக்கு எந்த எதிர்காலமும் இல்லை. மகிந்தாவின் மகன் நமல் ராஜபக்சே அமைச்சராக இருந்த போதிலும், மக்கள் மத்தியில் நற்சான்றிதழ் கொண்ட ஒரு ஆளுமையாக நிரூபிக்க முடியவில்லை. தந்தையின் நிழலிலேயே வெற்றி பெற்ற இவரால் திருப்புமுனையை ஏற்படுத்த முடியாது. இவ்வாறு பெரரோ கூறினார். மற்றொரு ஆய்வாளர் எம்.எஸ்.எம்.அயூப், கூறுகையில், ‘‘நமல், அவரது உறவினர் ஷஷீந்திரன் ஆகியோர் இளையவர்கள். அவர்கள் 2025 அல்லது 2030ம் ஆண்டு தேர்தலை குறிவைத்து களத்தில் குதிக்கலாம். ஆனாலும், எந்த காலத்திலும், மறக்க முடியாத ஒரு வடுவை ராஜபக்சேக்கள் ஏற்படுத்தி உள்ளனர். எனவே, அதை தாண்டி ராஜபக்சே வாரிசுகள் இனியும் இலங்கை அரசியலில் வெற்றி பெறுவது சாத்தியமில்லாத ஒன்றுதான் என்கிறார்.

இந்நிலையில், கடும் கட்டுப்பாடுகளை மீறி அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் நேற்று முன்தினம் கைப்பற்றிய நிலையில், இரவு முழுவதும் அங்கேயே தங்கினர். அதிபரின் நீச்சல் குளத்தில் குளித்தும், அதிபரின் சமையலறையில் சமைத்து சாப்பிட்டும், அதிபரின் மெத்தையில் படுத்து தூங்கியும், அதிபரின் பியானோவை வசித்தும், அதிபரின் ஜிம்மில் உடற்பயிற்சி செய்தும், அதிபரின் இருக்கையில் அமர்ந்தும் சந்தோஷப்பட்டனர். அவர்களை வெளியேற காவல்துறையினர் பலமுறை கேட்டுக் கொண்டும் வெளியேற மறுத்து விட்டனர்.

கோத்தபய ராஜபக்சேவின் மகன் மனோஜ் இராஜபக்சே அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகிறார். அவரது வீட்டின் முன்பாகவும், இலங்கை வம்சாவளிகள் போராட்டம் நடத்தினர். மனோஜ் ராஜபக்சே வீட்டின் முன்பாக, ‘இது பொதுமக்களின் பணத்தைக் கொள்ளை அடித்துக் கட்டப்பட்ட வீடு’ என பதாகைகளை எழுதி வைத்தனர். ‘உனக்கு வெட்கமே இல்லையா’ எனப் பலர் கூச்சலிட்டனர். அந்த வழியாகச் செல்பவர்களிடம், ‘இவரது தந்தை எங்கள் நாட்டு மக்களின் பணத்தைக் கொள்ளை அடித்துக் கட்டிய சொகுசு பங்களா இது’ என விளக்கம் அளித்தனர். இதுதொடர்பான காணொலிகள் சமூக வலைதளங்களில் பரவி உள்ளன.

Leave a Response