ஓபிஎஸ் இபிஎஸ் செய்த துரோகங்களை மறந்துவிடுங்கள் – தொண்டர்களுக்கு சசிகலா அறிவுரை

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் இன்று (மே 15) நடைபெற்ற சசிகலாவின் ஆதரவாளர் வீட்டுத் திருமண விழாவில் கலந்து கொண்டு வி.கே.சசிகலா பேசியதாவது….

அதிமுக கட்சி ஒன்றுபட வேண்டும், வென்று காட்ட வேண்டும். அதிமுக உண்மையான தொண்டர்களின் தியாகத்தால் உருவானது. எதிர்க்கட்சியினர் எத்தனை கணக்குகள் போட்டாலும், நான் இருக்கும் வரை இந்த இயக்கத்தை யாராலும் அழித்து விடமுடியாது. இந்த இயக்கம் எத்தனையோ சோதனையான காலகட்டங்களை எல்லாம் கடந்து வந்துள்ளது.

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அதே சோதனையான காலம்தான், ஜெயலிலதா மறைவுக்குப் பிறகு மீண்டும் ஏற்பட்டுள்ளது. அன்றைக்கு எப்படி கட்சி மீண்டெழுந்ததோ, அதே போல தற்போதும் புதுப்பொலிவு பெறும். இந்தக் கட்சி உன்னத நிலையை அடையும் வரை நான் ஓயமாட்டேன்.

தமிழக மக்கள் மறைந்த முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி மீண்டும் வராதா? என எதிர்பார்த்திருக்கும் சூழலில், விரைவில் அதனை நிறைவேற்றிக் காட்டுவேன். அதிமுகவைக் காப்பாற்றிடவும், மீண்டும் வலிமை கொண்ட இயக்கமாக உருவாக்கிடவும் தகுந்த நேரம் வந்துவிட்டது.

அனைவரையும் ஒருங்கிணைத்து, ஒரே இயக்கமாக உருவாக்கப் பயணித்து வரும் சூழலில், தொண்டர்கள் அனைவரும் பொறுமை காக்க வேண்டும். பிரச்சினைகளை தீர்க்கப் பொறுமையோடு எதிர்கொண்டால் வெற்றியைக் காணமுடியும்.

நான் ஒரு குட்டிக் கதையைச் சொல்கிறேன், “குரங்கு ஒன்று மாங்கொட்டையை ஊன்றி, மரமாக வளரச்செய்தால், நம் இஷ்டத்துக்கு மாம்பழங்களைச் சாப்பிடலாம் என நினைத்து மாங்கொட்டையை மண்ணுக்குள் புதைத்து நீரூற்றியது. சிறிது காலம் ஆகியும் செடி வளரவில்லை. குரங்குக்கோ அவரசம். அந்த அவசர புத்திகொண்ட குரங்கு, மண்ணில் புதைத்து வைத்து இருந்த மாங்கொட்டையை எடுத்துப் பார்ப்பது, மீண்டும் மண்ணில் புதைப்பதுமாக இருந்தது. மாங்கொட்டை பத்திரமாக இருப்பதைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விட்டது. ஆனால், மாங்கொட்டையை எடுத்து எடுத்துப் பார்த்ததால் செடியாக முளைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த குரங்கு மாங்கொட்டையைத் தூர எறிந்து விட்டு வருத்தப்பட்டது.

அதாவது குரங்கின் ஆசை நியாயமானது என்றாலும், அதன் அவசரபுத்தி நியாயமானதல்ல. காலம் என்ற நியதி இல்லாமல், எந்தச் செயலும் நிறைவேறுவதில்லை. எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்க வேண்டும் என்றால், விதையை விதைத்து நீருற்றி சில காலம் பொறுமை காக்க வேண்டும். அதுபோல நம் செயல்கள் இருக்க வேண்டும். சோதனைகளில் நமக்குக் கிடைத்த அனுபவங்களை நாம் நிச்சயம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். சில விசயங்களை நாம் மறந்து விட வேண்டும். அப்படிச் செயல்பட்டால் அதிமுக வலிமை பெரும்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

இப்பேச்சில் சில விசயங்களை நாம் மறந்துவிடவேண்டும் என்று அவர் குறிப்பிட்டது ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி ஆகியோர் செய்த துரோகங்களைத்தான் என்றும், இனிவரும் காலம் அதிமுக வலிமையாக இருக்க அனைவரையும் அரவணைத்துச் செல்ல அவர் தயாராக இருக்கிறார் என்றும் அவருடைய ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Response