கறுப்புக்கொடி கறுப்பு பலூன் கொடும்பாவி எரிப்பு – அமித்ஷாவை அலறவிட்ட புதுச்சேரி

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு நாள் பயணமாக இன்று புதுச்சேரி வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டார்.

தமிழைப் பழித்து இந்தியைத் திணிக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுவை வந்தால் கறுப்புக்கொடி காட்டுவோம் என தந்தைபெரியார்திராவிடர் கழகம் உள்ளிட்ட முஏபோக்கு இயக்கத்தினர் அறிவித்திருந்தனர்.

இதற்குக் காங்கிரசுக் கட்சியும் ஆதரவு தெரிவிந்திருந்தது.

அதன்படி இன்று காலை சாரம் அவ்வை திடலில் மாநில காங்கிரசு தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர்கள் கமலக்கண்ணன், விஸ்வநாதன், சிபிஐ மாநிலச் செயலாளர் சலீம், சிபிஎம் பிரதேசச் செயலாளர் ராஜாங்கம், தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் பெருமாள், விசிக முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன், சிபிஐ (எம்-எல்) செயலாளர் சோ.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடி அமித்ஷா வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில், புதுவையை வஞ்சிக்கும் இந்தியைத் திணிக்கும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கறுப்புக் கொடியுடன் அமித்ஷாவே திரும்பிப் போ என்று முழக்கம் எழுப்பப்பட்டது.

இதையடுத்து காவல்கண்கணிப்பாளர் ஜிந்தா கோதண்டராமன் தலைமையிலான காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து கறுப்புக் கொடிகளைப் பறித்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கடும் வாக்குவாதம் நடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரிக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதசார்பற்ற கூட்டணிக் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் இன்று பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, அமித்ஷாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கறுப்பு பலூன்கள் விடுவதற்காக அழைத்து வரப்பட்ட ஜெய்சங்கர் என்ற பலூன் வியாபாரியை கோரிமேடு காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து ஒரு பாக்கெட் கறுப்பு பலூன் மற்றும் இரண்டு சிறிய சிலிண்டர்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

போராட்டத்தின் போது அமித்ஷா கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.

Leave a Response