மாயவரத்தைத் தொடர்ந்து கோவையிலும் கறுப்புக்கொடி – ஆளுநருக்கு அதிகரிக்கும் எதிர்ப்பு

கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் நேற்று பிற்பகல் அனைத்து முற்போக்கு இயக்கக் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்தக் கூட்டமைப்பின் சார்பில் தபெதிக பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது….,

தமிழக மக்களின் நலனுக்காக தமிழக அரசு நிறைவேற்றிய 19 சட்டமுன்வடிவுகளை தமிழக ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார் எனவும் கல்வி உரிமைகளில் ஆளுநர் தலையிட்டு வருகிறார்.

நீட் உட்பட பல்வேறு விவகாரங்களில் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இருப்பதோடு தமிழக மக்களின் வரிப் பணத்தில் செயல்படும் ஆளுநர் மாளிகை சனாதான மையமாக மாறி வருகின்றது. மாநிலங்கள் வலிமை பெறக்கூடாது என்ற கருத்தை தமிழக ஆளுநர் வலியுறுத்தி வருவதுடன், பல்கலைக் கழகங்களைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு செயல்பட்டு வருகின்றார்.

சென்னா ரெட்டி ஆளுநராக இருந்த போது அவரைத் தாக்கிய அதிமுகவினர், இப்போது ஆளுநருக்கு ஆதரவாகப் பேசுகின்றனர். தமிழக ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள மான்கள் குறித்துக் கூட வனத்துறையால் கேள்வி எழுப்ப முடியாத நிலை இருந்து வருகின்றது

இப்படி தமிழக மக்களுக்கு எதிராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருவதால் தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் நாளை (இன்று) மதியம் கோவை விமான நிலையம் வரும் தமிழக ஆளுநர். ஆர்.என். ரவிக்கு கோவை விமான நிலையத்தில் அனைத்து முற்போற்கு இயக்கங்கள் சார்பில் கறுப்புக்கொடி காட்டப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏப்ரல் 20 அன்று மயிலாடுதுறை சென்ற ஆளுநருக்கு அங்குள்ள மக்கள் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து இன்று கோவையில் கறுப்புக்கொடி காட்டப்படும் என்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response