அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கம் – ஒன்றிய அரசு அறிவிப்பு

2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரில் முதல் முதலாக பரவிய கொரோனா வைரஸ், உலகின் அனைத்து நாடுகளிலும் பரவி, பலத்த உயிர்ச் சேதம், பெரும் பொருளாதார இழப்புகள் என மோசமான பாதிப்புகளை உருவாக்கி இருக்கிறது. கட்டுப்பாடுகள், ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளால் பல இலட்சம் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு, கோடிக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர்.

இந்திய ஒன்றியத்தில் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், தொற்றுப் பரவலைத் தடுக்க, மக்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது, நாடு முழுவதும் பெரும்பான்மை மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டது. மேலும், பல கோடி மக்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டு, இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றுள்ளனர்.

இதனால், 2 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு முழுவதும் தற்போது தினசரி கொரோனா பாதிப்புகள், பலிகள் கணிசமாக சரிந்துள்ளன. எனவே, மக்களின் நடமாட்டத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை ஒன்றிய, மாநில அரசுகள் படிப்படியாக தளர்த்தி வருகின்றன. இதனால், மக்கள் தற்போது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு, பலிகள் சரிந்து விட்டதால், கடந்த 2 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் இம்மாதம் 31 ஆம் தேதி முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகள், யூனியன் அரசுகளின் தலைமைச் செயலாளர்களுக்கு ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் பல்லா நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது…..

நாட்டில் தற்போது கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருவது மட்டுமின்றி, இறப்பு எண்ணிக்கையும் குறைந்துள்ளது. கடந்த 24 மாதங்களில் நோய் கண்டறிதல், கண்காணிப்பு, தொடர்பு தடமறிதல், சிகிச்சை, தடுப்பூசி போன்ற பல்வேறு நடவடிக்கைளின்
காரணமாக கடந்த 7 வாரங்களில் தொற்று எண்ணிக்கை கணிசமாகச் சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் உள்ள பதிவின்படி, நாடு முழுவதும் தற்போது 23,913 கொரோனா நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 0.28 சதவீதமாக குறைந்துள்ளது. அனைவரின் ஒருங்கிணைந்த முயற்சியுடன் நாட்டில் 181.56 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. எனவே, நோய்த் தொற்றைச் சமாளிக்கும் திறன், தயார் நிலை போன்றவற்றைக் கருத்தில் கொண்ட பிறகு, நாட்டில் தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் கொரோனா பேரிடர் மேலாண்மைச் சட்ட விதிகளைச் செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்ற முடிவை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எடுத்துள்ளது.

இதன்படி, இந்த மாதம் 31 ஆம் தேதியுடன் தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் நீக்கும்படி அனைத்து மாநில அரசுகளும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்கும்படி ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, வரும் 31 ஆம் தேதியுடன் முடிகிறது. அதன் பிறகு, இந்தக் கட்டுப்பாடுகளை நீட்டிப்பதற்கான எந்த உத்தரவையும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் பிறப்பிக்காது. இருப்பினும், முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். அதற்கு ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழிகாட்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response