முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சிறையில் அடைப்பு – புகார் விவரம்

பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டுப்பதிவு பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சில மையங்களில் கள்ளஓட்டு சிக்கல் எழுந்தது. இதனால் தி.மு.க.- அ.தி.மு.க.வினர் இடையே பிரச்சினை எழுந்தது.

இராயபுரம் மண்டலத்துக்குட்பட்ட 49 ஆவது வார்டு பழைய வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள காமராஜர் மெட்ரிகுலேசன் பள்ளி வாக்குச்சாவடி மையத்துக்கு அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர் சென்றார். அப்போது தி.மு.க. தொண்டர் நரேஷ்குமார் (வயது 33) என்பவரை ஜெயக்குமார் மற்றும் அ.தி.மு.க.வினர் பிடித்தனர். பின்னர் அவரது சட்டையைக் கழற்றி கைகளைப் பின்னால் கட்டி இழுத்துச்சென்று காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. ஜெயக்குமாரும் தனது முகநூல் பக்கத்தில் அந்தக் காணொலியைப் பதிவேற்றம் செய்திருந்தார்.

இந்த நிலையில் நரேஷ்குமார், ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாகச் சேர்ந்தார். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜெயக்குமார் மற்றும் 40 பேர் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், தமிழ்நாடு பொதுச்சொத்து சேதம் விளைவித்தல், பயங்கர ஆயுதங்கள் கொண்டு காயம் ஏற்படுத்தும் நடவடிக்கை உள்பட 15 சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டையார்ப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குமூலம் வருமாறு…..

நான் நரசய்யா தெருவில் துணிக்கடை வைத்து உள்ளேன். தேர்தல் அன்று மாலை 4.30 மணிக்கு வார்டு எண்.49 இல் காமராஜர் மெட்ரிக்குலேசன் பள்ளி சஞ்சீவிராய கோவில் தெருவில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் மிகவும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. நான் அங்கு சென்று தி.மு.க. தொண்டராக நின்று கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் எதிர்பாராத நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவரது வெள்ளை நிற காரில் அ.தி.மு.க. கட்சி கொடியுடன் வாக்குச்சாவடி மையத்துக்கு வந்தார். 20 மோட்டார் சைக்கிள்களில் 40 பேரும் அவருடன் வந்தனர். ஏ.டி.அரசு, சோமு, சந்திரன் மற்றும் லோகு ஆகியோருடன் வந்து வாக்குச்சாவடி மையத்துக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டனர்.

இதனை அங்கு நின்று கொண்டிருந்த நான் அவர்கள் அருகே சென்று ஏன் இவ்வளவு நபர்களுடன் வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைகிறீர்கள் என்று கேட்டேன். அப்போது ஜெயக்குமார் என்னை பார்த்து ஆபாச வார்த்தைகளை பேசினார். ஒரு முன்னாள் அமைச்சரையே கேள்வி கேட்கிறீயா, இவனை அடித்து சாவடிங்கடா என்று கூறினார். உடனே ஏ.டி.அரசு, என்னை எட்டி உதைத்தார். நான் நிலை தடுமாறி கீழே விழுந்தேன். அப்போது அவருடன் பார்த்தால் அடையாளம் காட்ட கூடியவர்கள் என்னை பலமாக தாக்கினார்கள். உயிர் பிழைத்தால் போதும் என்று அவர்களிடம் இருந்து தப்பி என் உயிரை காப்பாற்றி கொள்ள நான் ஓடினேன். அப்போதும் என்னை விடாமல் துரத்தி ஜெயக்குமார், ஏ.டி.அரசு, சோமு, சந்திரன், லோகு மற்றும் அவருடன் வந்த அனைவரும் விரட்டி பிடித்து என்னை மறுபடியும் பலமாக தாக்கி என்னை கொடுங்காயப்படுத்தினர்.

அது மட்டுமல்லாமல் என்னுடைய மேல் சட்டையை கழற்றி என் இரு கைகளையும் கட்டி கொலை குற்றவாளி போல என்னை அரை நிர்வாணப்படுத்தி இழுத்து வந்தனர். அதில் எனக்கு முதுகு தண்டுவடம், இடது கை மற்றும் வலது கை மோதிர விரலில் பலத்த காயம் ஏற்பட்டது.

அதுமட்டும் அல்லாமல் 2 கால்களும் பலத்த காயம் ஏற்பட்டது. வலி தாங்காமல் நான் மயங்கி கீழே விழுந்துவிட்டேன். என் அருகில் இருந்த நண்பர்கள் என்னை பத்திரமாக மீட்டு ஆட்டோவில் ஏற்றி அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து டாக்டரிடம் காண்பித்தனர். என்னை தாறுமாறாக அடித்த முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல் தகவல் அறிக்கையில் தகவல் இடம் பெற்றுள்ளது.

இந்த நிலையில் ஜெயக்குமாரை, சென்னை பட்டினப்பாக்கத்தில் அவரது இல்லத்தில் வைத்து, வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் (பொறுப்பு) சுந்தரவதனம் தலைமையிலான 40 பேர் அடங்கிய காவல்துறையினர் நேற்று இரவு 8 மணியளவில் கைது செய்தனர். இதற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் அவரை, லுங்கியுடன் அழைத்து சென்றனர்.

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜார்ஜ் டவுண் 15 ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மார்ச் மாதம் 7ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க ஜார்ஜ் டவுண் 15வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முரளி கிருஷ்ணா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து பூந்தமல்லி சிறையில் ஜெயக்குமார் அடைக்கப்பட்டார்.

Leave a Response