தொடர்வண்டித் துறையில் சமசுகிருதம் திணிப்பு – சு.வெங்கடேசன் எதிர்ப்பு

ரயில் டிக்கெட் எடுக்க சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா என மதுரை எம்பி சு வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறுகையில்…

ஐஆர்சிடிசி ரயில் பயணச் சீட்டு முன் பதிவுக்குள் போனால் ஜெனரல், லேடீஸ், லோயர் பெர்த் அல்லது சீனியர் சிட்டிசன், தட்கல் என்ற தெரிவுகள் இருக்கும்.

மேலும் திவ்யாங் என்ற ஒரு தெரிவும் இருக்கும். திவ்யாங் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு தெய்வீக உறுப்பு கொண்டவர் என தமிழில் பொருளாம். மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதமர் வைத்த பெயர் அது.

அதிகாரிகளின் விசுவாசமோ என்னவோ ஐஆர்சிடிசி முன் பதிவில் அதை சொருகி விட்டார்கள். இந்தியாவில் சமஸ்கிருதத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் 14135 பேர்தான். தமிழ் 8 கோடி பேரின் தாய்மொழி. ஒன்றிய அரசும் அதன் அதிகாரிகளும் நினைத்தால் 14000 பேரின் தாய்மொழியை புரிகிறதா புரியாதா என்று கூட யோசிக்காமல் திணிக்க முடியும்.

ஆனால் இவ்வளவு தொழில்நுட்ப மேம்பாடு இருந்தாலும் 8 கோடி பேரின் தாய்மொழியை முன்பதிவுக்கான தெரிவு மொழியில் இணைக்க முடியாது.

ஆங்கிலமே திணற அடிக்கும் போது அறவே புரியாத மொழியை எல்லாம் திணிப்பதை கைவிடுங்கள். வார்த்தைகளில் புனிதம் இருந்தால் போதாது. நோக்கம் புனிதமாக இருக்க வேண்டும்.

என சு.வெங்கடேசன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response