மோடிக்கு எதிரான ஒன்று கூடல்! பஞ்சாப் சென்ற சீமான்

மனித உரிமைகள் நாளையொட்டி (டிசம்பர்10), பஞ்சாப் மாநிலத்தைச்சார்ந்த‘தல்கல்சா’அமைப்பு சார்பாக அமிர்தசரசில் பல்வேறு தேசிய இனங்களின் அரசியல் ஆளுமைகள்,மனித உரிமை ஆர்வலர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள் பலர் பங்கேற்கும்‘மக்கள் உரிமை ஒன்றுகூடல்2021′ எனும் நிக‌ழ்வு நடைபெற்றது.

மனித உரிமைகளுக்கான நாகா மக்கள் இயக்கம், திரிபுரா மக்கள் முன்னணி, தல்கல்சா மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் இந்நிகழ்வில் பங்கேற்றன.

பல்வேறு தேசிய இனங்களின் ஆளுமைகளோடு நாம்தமிழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று உரையாற்றினார்.

அந்த உரையில்…

மனித உரிமைக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிற்கும் நாள் இன்று!
‘சுதந்திரம் என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாதவனுக்குக்கூட சுதந்திரம் தேவைப்படுகிறது.

பறவைக்கு இறக்கை போல, வண்டிக்கு அச்சாணிபோல,மனித உடலுக்கு முதுகெலும்புபோல ஒவ்வொரு மனிதனுக்கும் சுதந்திரம் தேவை’ என்கிறார் ஹோசே மார்த்தி. பல்வேறு தேசிய இனங்களின் மக்களாகிய நாம் நம்முடைய மேலதிக உரிமைக்காகப் ஒன்றிணைந்து இங்கே கூடியிருக்கிறோம்.

அழித்தொழிக்கப்பட்ட ஒரு இனத்தின் மகன் நான். ஈழத்தில் 2008 -2009 ஆண்டுக் காலக்கட்டத்தில் ஒரு இலட்சத்து 76 ஆயிரம் எம்மினச் சொந்தங்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள். பச்சிளங்குழந்தைகள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டார்கள். பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்கள். வீடுகள், பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டன. எல்லாவற்றையும் இழந்து நாங்கள் நிற்கதியாக நின்றுகொண்டிருந்தோம்.

ஆனாலும், தேசிய இனத்தின் மக்களான நாம் அனைவரும் ஒன்றிணைந்து மனித உரிமைக்காக இன்று கூடியிருக்கிறோம்.ஸ்டான் லூர்துசாமி அவர்களுக்கு உரிய மருத்துவத்தைக் கூடக் கொடுக்காமல் அவரை மரணிக்கச் செய்துவிட்டார்கள் என்பதை இங்கே பேசிய தலைவர் பெருமக்கள்கூடக் குறிப்பிட்டார்கள். அதைப்போலவே, இன்று என்னுடைய சகோதரன் யாசின் மாலிக் ஐந்தாண்டுகளாக திகார் சிறையிலே வாடிக்கொண்டிருக்கிறார்.

மேடைப்பதாகையில் என்னுடைய அன்புத்தம்பி பேரறிவாளன், அன்பு அக்கா நளினி ஆகியோரது படமும் இருக்கிறது. அவர்கள் 30 ஆண்டுகளாகச் சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். ஏழு பேர் விடுதலைக்காக எண்ணற்ற போராட்டங்களைச் செய்துகொண்டிருக்கிறோம். தமிழக மீனவர்கள் 840 பேருக்கும் மேல் இலங்கை கடற்படையினரால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அண்மையில்கூட ராஜ்கிரண் என்ற ஒரு தம்பியை சிங்கள இராணுவம் கொலை செய்துவிட்டது.
ஆனால், பாஜகவின் ஆட்சியாளர்கள் ஒரு சிறுகண்டனம், சிறு வருத்தத்தைக்கூடப் பதிவு செய்யவில்லை என்பது மிகப்பெரியக் கொடுமை.

ஒன்றிணைந்துப் போராடினால், உறுதியாக நின்றுப்போராடினால் வெற்றிபெற முடியும் என்று நிரூபித்தவர்கள் நீங்கள். டெல்லியிலே நடந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக்கோரியப் போராட்டத்திலே தொடர்ச்சியாகக் களத்திலே நின்று நீங்கள் வென்று காட்டியதுபோல, தேசிய இனங்களான நாம் அனைவரும் ஒன்றிணைந்து நின்றால் உறுதியாக நம் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்ற உறுதியை நான் உங்களுக்குத் தருகிறேன்.

பாராளுமன்றத்தில் எந்த விவாதங்களும் நடத்தாமல் கொடும் சட்டங்களை இயற்றிக்கொண்டே இருக்கிறது இந்திய ஒன்றிய அரசு. அதுமட்டுமின்றி, என்னுடைய அலைபேசி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரின் அலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது. ஆனால், அலைபேசி ஒட்டுக்கேட்பதில் எவ்விதத் தனிமனித சுதந்திர மீறலோ, தனிமனித உரிமைப்பாதிப்போ இல்லை என்று அரசு நீதிமன்றத்தில் வாதிடுகிறது.

பல்வேறு தேசிய இனங்களின் அரசியல் ஆளுமைகள், மனித உரிமை ஆர்வலர்கள், சமூகச்செயற்பாட்டாளர்கள் எனப் பலர் பங்கேற்றுள்ள இம்மாபெரும் நிகழ்வை ஒருங்கிணைத்த ‘தல் கல்சா’ அமைப்பிற்கும், என்னுடைய போற்றுதற்கும், வணக்கத்துக்கும் உரிய ஐயா ஜக்மோகன் சிங் அவர்களுக்கும், ஒன்றுகூடல் நிகழ்வில் பங்கேற்றுள்ள தேசிய இனங்களின் தலைவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியும், வாழ்த்துகளும்!

தொடர்ந்து மனித உரிமைக்காக நாம் ஒன்றிணைந்து நிற்போம்!

இவ்வாறு சீமான் உரையாற்றியுள்ளார்.

Leave a Response