இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா – சென்னை அணி சென்னையில் விளையாடாது ஏன்?

இந்திய மட்டைப்பந்து விளையாட்டு வாரியம் சார்பில், ஐ.பி.எல். 20 ஓவர் மட்டைப்பந்துப் போட்டி 2008 ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது.

இந்திய வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களும் விளையாடும் இந்தப் போட்டிகளுக்கு இரசிகர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு உண்டு.

இ்ந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்ததால் 13 ஆவது ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் அங்கு நடத்தப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வராவிட்டாலும் ஐ.பி.எல். போட்டிகள் மீண்டும் இந்தியாவுக்கு திரும்புகின்றன.

14 ஆவது ஐ.பி.எல். திருவிழா இன்று (ஏப்ரல் 9- வெள்ளிக்கிழமை) முதல் மே 30 ஆம் தேதி வரை சென்னை, பெங்களூரு, மும்பை, ஆமதாபாத், கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.

நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இறுதிப்போட்டி உலகின் மிகப்பெரிய அரங்கம் அமைந்துள்ள ஆமதாபாத்தில் மே 30 ஆம் தேதி அரங்கேறுகிறது.

வழக்கமாக ஒவ்வொரு அணிக்கும் உள்ளூர் மைதானங்களில் 7 லீக் ஆட்டங்கள் நடத்தப்படும். இது தான் அந்த அணிக்கும் சாதகமான அம்சமாக இருக்கும். ஆனால் முதல்முறையாக இந்த சீசனில் எந்த அணிக்கும் தங்களது சொந்த ஊரில் போட்டிகள் கிடையாது. உதாரணமாக சென்னை சேப்பாக்கத்தில் மொத்தம் 10 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. ஆனால் சென்னை அணிக்கு இங்கு ஒரு ஆட்டமும் கிடையாது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 10 ஆட்டங்கள் நடந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அங்கு பயணிக்க வேண்டிய தேவையில்லை.

ஐதராபாத், மொகாலி, ஜெய்ப்பூர் ஆகிய இடங்கள் இந்த முறை போட்டிக்குத் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் அந்த நகரங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ஐதராபாத் சன்ரைசர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அதிருப்திக்குள்ளாயின. அவர்களை சரிகட்டுவதற்காக யாருக்கும் உள்ளூர் ஆட்டங்கள் இல்லாதவாறு போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொரோனா அச்சத்துக்கு மத்தியில் போட்டியை நடத்த வேண்டி இருப்பதால் வீரர்களின் அதிகமான போக்குவரத்தைத் தவிர்ப்பதற்காக போட்டி நடக்கும் இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கிறது.

லீக் சுற்றின் போது ஒவ்வொரு அணிகளும் மொத்தம் 3 தடவை மட்டுமே மற்ற இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளும்.

கொரோனா எதிரொலியாக கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியை நேரில் பார்க்க இரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த சீசனிலும் இரசிகர்களின் ஆரவாரத்தைப் பார்க்கும் வாய்ப்பு இல்லை. பூட்டிய மைதானத்திலேயே ஆட்டங்கள் நடக்க உள்ளன.

கொரோனா தடுப்பு மருத்துவ உயிர்ப் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு அதில் இணைந்துள்ள வீரர்கள் மற்றும் பயிற்சிக் குழுவினர், நிர்வாகிகள் எந்தக் காரணத்தை கொண்டும் கொரோனா விதிமுறைகளை மீறக்கூடாது என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.வீரர்களுக்கு அடிக்கடி கொரோனா பரிசோதனை செய்யும் நடைமுறை இந்த முறையும் தொடரும். எந்த வீரருக்காவது கொரோனா பாதிப்பு தென்பட்டால் உடனடியாக அந்த வீரர் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவார்.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கத்தில் இன்றிரவு அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இ்ந்தியன்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

Leave a Response