நிவர் புயலின் பாதையும் பயணமும்….
நவம்பர் 25 – காலை ஏழு மணி – நிவார் புயலின் கண் என்று கருதத்தக்க முட்டையின் மஞ்சள் கரு போன்ற நடுப்பகுதி வங்கக்கடலில் நாகைக்கு நேர்கிழக்கே நிலைகொண்டிருக்கிறது.
நவம்பர் 25 – நண்பகல் ஒரு மணி – புயலின் நடுக்கண் அப்படியே வடமேற்காக நகர்ந்து நண்பகலில் நெய்வேலிக்கும் மயிலாடுதுறைக்கும் நேர்கிழக்கே கடலுக்குள் நிற்கும்.
நவம்பர் 26 – நள்ளிரவு பன்னிரண்டு – மேலும் வடமேற்காக நகர்ந்து செல்லும் புயற்கண் புதுச்சேரிக் கடற்கரைக்கு மிக அருகில் நிலத்தினை அணுகும் நிலையில் காணப்படுகிறது. அவ்வமயம் ஆந்திரத்தின் கீழ்ப்பகுதியிலிருந்து காவிரிக் கழிமுகப்பகுதி வரைக்கும் கரைகடப்புப் புயலால் விளையும் மழை வலிய காற்றுடன் பெய்யும்.
நவம்பர் 26 – நள்ளிரவு இரண்டு மணி – நள்யாமம் கடந்ததும் மாமல்லபுரத்திற்குத் தெற்கே சேயூரில் நிலத்தின்மீது மேவும் புயலின் நடுக்கண். அது தொடங்கி விடிகாலைவரைக்கும் மழை அடித்து ஊற்றும்.
நவம்பர் 26 – விடிகாலை நான்கு மணி – நிலத்திற்குள் நுழைந்த புயல் மதுராந்தகத்திற்கும் செங்கற்பட்டிற்கும் நடுவே கடந்து செல்லும். அந்நேரத்தில் சென்னைக்கு வடக்கு முதல் புதுச்சேரி வரைக்கும் பெருமழை பெய்யும்.
நவம்பர் 26 – காலை ஒன்பது மணி – புயல் ஏறத்தாழ வலுவிழந்து நிற்கிறது. அந்நேரத்தில் புயலின் நடுக்கண் ஆற்காட்டுக்கு அருகில் வந்து குலைகிறது. பிறகு வேலூர் வழியாக ஆந்திரத்தின் ஆனந்தப்பூர் மாவட்டத்திற்குள் நுழைந்து முடிவுக்கு வருகிறது.
ஆந்திரத்தின் எல்லைப்பகுதி தொடங்கி காவிரிக் கழிமுகம் வரையிலான மாவட்டத்தவர்கள் மிகுந்த முன்காப்போடு இருக்க வேண்டும்.
நன்றி – விண்டி