கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
தமிழகத்தில் கொரோனாவால் 411 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று மேலும் 74 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழகக்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்து இருக்கிறது.
கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 54 வயது ஆண் ஒருவர் மார்ச் மாதம் 26-ந் தேதி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதுதான் தமிழகத்தில் நிகழ்ந்த முதல் கொரோனா பலி ஆகும்.
இதையடுத்து, டெல்லி மாநாட்டுக்குச்சென்று திரும்பிய 51-வயது ஆசிரியர், நேற்று காலை 7.45 மணியளவில் உயிரிழந்தார். இதேபோல் தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் நேற்று கொரோனா தொற்றால் மரணம் அடைந்தார்.
அதேபோல், கொரோனா அறிகுறியுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72-வயது முதியவர் கடந்த 2 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது இரத்த மாதிரிகளைப் பரிசோதனை செய்ததில் அவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் நள்ளிரவு உயிரிழந்துள்ளார். ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 61-வயது முதியவர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.