தேர்தல் முறைகேட்டால் தோல்வி – மு.க.ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு

சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்,கொளத்தூர் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது….

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டேன். தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களில் பல குளறுபடிகள் நடந்துள்ளன.
எனவே,வாக்குப் பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையத்தின் அனுமதி கேட்கப்பட்டது.

அனுமதி பெற்றவுடன் அதன் அடிப்படையில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தலைமையிலான வழக்கறிஞர்கள் சிந்தாதிரிப்பேட்டையில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்தனர். குறிப்பாக வாக்குப்பதிவு மையங்களான 1, 17, 28, 32, 75, 78, 79, 84, 87, 112, 122, 157, 170 உள்ளிட்ட வாக்குச் சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த விவி பேட், வாக்குப்பதிவு இயந்திரம்,கண்ட்ரோல் யூனிட் ஆகியவை பெல் நிறுவனத்தின் பொறியாளர்கள் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டன.நூறு சதவீத வி.வி.பேட் (ஒப்புகைச் சீட்டு இயந்திரம்) மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது.இதில் ஆறு வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் மற்றும் விவிபேடுகளின் ஒப்புகைச் சீட்டுகளை ஒப்பிட்டுப் பார்த்ததில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டன.

வாக்கு சாவடிகள் 28 மற்றும் 75ல் விவிபேடுகள் சரிவர இயங்கவில்லை.வாக்குச் சாவடி 208 இல் கட்டுப்பாடு யூனிட்டில் குறைபாடு இருந்துள்ளது.28, 75, 79, 157, 208 ஆகிய வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகளில் முரண்பாடு ஏற்பட்டுள்ளன.

இதையடுத்து,எங்கள் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு புகார் கடிதம் எழுதினார்.தேர்தல் இயந்திரம் தொடர்பாக புகார் செய்வது தொடர்பான வெளிப்படையான ஒரு நடைமுறையே இல்லை.பல வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு முறைகேடு நடந்துள்ளது. குறிப்பாக பல வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஹார்டுவேர் என்று சொல்லக்கூடிய வன்பொருள் கோளாறு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

தொழில்நுட்பக் கோளாறுகளை சுட்டிக்காட்டிய பின்பும் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படிதான் சோதனை மற்றும் சரிபார்த்தல் நடைபெற்றதாகத் தெரிவித்துள்ளார்.எனவே,பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவி பேடுகளை சரிபார்க்க வேண்டும்.

இவ்வளவு தொழிழிநுட்பக் கோளாறுகளைக் கணக்கில் கொள்ளாமல் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கவேண்டும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது என்கிறார்கள்.

Leave a Response