2019 நாடாளுமன்றத் தேர்தல், ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 11,ஏப்ரல் 18,ஏப்ரல் 23,ஏப்ரல் 29,மே 6,மே 12,மே 19 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது.
தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18 ஆம் தேதியன்று நடைபெறும்.
தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் தேர்தல் நடக்க உள்ள ஏப்ரல் 18 ஆம் தேதி தென் தமிழகத்தில் இரு முக்கியமான நிகழ்வுகள் இருக்கின்றன. ஒன்று மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருத்தேர். மற்றொன்று, கள்ளழகருக்கு எதிர்சேவை. இரண்டிலும் இலட்சோபலட்சம் மக்கள் பங்கு பெறுவார்கள். ஏப்ரல் 8 முதல் 22ஆம் தேதிவரை சித்திரத் திருவிழா மதுரையில் நடக்கிறது.
இதனால் தமிழகத்தில் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கும் நடந்துவருகிறது.
இந்நிலையில் தமிழக்த்தில் தேர்தல் தேதி மாற்றப்படும் என்றும் மே 6 அல்லது 12 ஆகிய ஏதாவதொரு தேதியில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்படும் என்று சொல்லப்படுகிறது. அதிகாரப்பூர்வமற்ற முறையில் கசியும் இந்தச்செய்தி விரைவில் அதிகாரப்பூர்வமாக வரும் என்கின்றனர்.