புதிய சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் வீடு

பிக்பாஸ் சீசன் 2 தற்போது நடந்து வருகிறது. 80 நாட்களை கடந்து நடக்கும் இந்நிகழ்ச்சி பார்வையாளர்களின் அமோக ஆதரவை பெற்ற நிகழ்ச்சி ஆகும். இந்நிகழ்ச்சியை கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 பேர்கள் பங்கேற்ற போட்டியில் தற்போது 8 பேர் மிஞ்சியுள்ளனர். நடிகைகள் மும்தாஜ், விஜயலட்சுமி, ஐஸ்வர்யா, ஜனனி ஐயர், ரித்விகா, யாஷிகா, சென்றாயன், தாடி பாலாஜி உட்பட 8 பேர் மட்டுமே மிஞ்சியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு, பூவிருந்தவல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் தனி அரங்கில் வீடு போன்று அமைத்து நடந்து வருகிறது.

பிக்பாஸ் போட்டியில் கடந்த ஆண்டுபோல் இந்த ஆண்டு வரவேற்பு இல்லை, இதனால் போட்டியை மேலும் 6 நாட்கள் நீடித்துள்ளனர்.

ரியாலிட்டி ஷோ என்பதால் அடைக்கப்பட்ட வீட்டுக்குள் அனைவரும் தங்கியுள்ளனர். அவர்கள் 106 நாட்கள் தங்கும் நாட்களில் உள்ளே ஏசி, குடிதண்ணீர், குளியலறை, உணவு, கேஸ், மின்சாரம், கேமரா, அரங்கம் அமைத்தல், திடீர் இடர்பாடுகளை களைதல் என பல பணிகளுக்காக நூற்றுக்கணக்கான ஊழியர்கள் அங்கேயே தங்கி 24 மணிநேரமும் பணியாற்றி வருகின்றனர்.

இந்தப்பணியில் அரியலூர் மாவட்டம், மத்தூரைச் சேர்ந்த குணசேகரன்(30) என்பவர் இந்த நிகழ்ச்சியில் ஏசி மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார். நிகழ்ச்சி நடக்கும் அரங்கின் 2-வது மாடியில் குணசேகரன் தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு குணசேகரன், தான் தங்கியுள்ள அரங்கின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குணசேகரன் மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தது குறித்து நசரத்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மருத்துவமனையிலிருந்த குணசேகரன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீஸ் விசாரணையில் குணசேகரன் சாப்பிட்டு விட்டு கைகழுவும் போது தவறி கீழே விழுந்ததாக அருகில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வு அருகிலுள்ள ஈவிபி படப்பிடிப்பு அரங்கில் நடந்ததென்றும் பிக்பாஸ் வீட்டில் எந்தச் சிக்கலும் இல்லையென்றும் சொல்லப்படுகிறது.

இரண்டில் எது சரி என்பது போகப்போகத் தெரியும் .

Leave a Response