
சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள ஏ.சி.சண்முகத்தின் தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் எம்ஜிஆர் சிலையை நடிகர் ரஜினிகாந்த் மார்ச் 5,2018 அன்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ரஜினி பேசியபோது,தமிழக அரசியல் குறித்துப் பேசினார். இதற்குக் கடும் எதிர்வினைகள் வந்துகொண்டிருக்கின்றன.
ரஜினியின் பேச்சு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பதாவது,
இத்தனை கோடி தமிழன் வாழ்கிற மண்ணில் ஒரு தலைவன் இல்லையென்று சொல்லி, அந்த இடத்துக்கு அவர் வரத் துடிப்பது பற்றி பேசுவது சிறப்பான பேச்சா?
தமிழர்களை அவர் எவ்வளவு எளக்காரமாக நினைத்திருக்கிறார் என்பதை உணர்த்தும் பேச்சு.
ஐயா நல்லக்கண்ணு மாதிரியான தியாகிகள் இந்த மண்ணோட தலைவர்கள் இல்லையா?. ஒவ்வொரு மாணவனும் ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேண்டும் என இவர் பேசுகிற போது, நம் மாணவர்களும் கை தட்டுகிறார்கள்.
ஒரு இனத்தை அழிக்க முதலில் அவர்களுடைய மொழியை அழிக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆங்கிலம் அவசியம் என இங்கே பேசிய பேச்சை கன்னட மக்கள் மத்தியில் பேசிவிட்டு ரஜினியால் வீடு திரும்பிவிட முடியுமா?
அரசியலுக்கு வந்தால் மாணவர்களின் படிப்பு போயிடும் என்கிறார். திரைப்படம் பார்த்தாலும் தான் மாணவர்களின் படிப்பு போய்விடும். தன்னுடைய படங்களை பார்க்க வேண்டாம் என மாணவர்களிடம் ரஜினி சொல்வாரா?
இவ்வாறு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.


