மொழிப்போர் ஈகியர் நினைவு நாள் இன்று – 25.1.1964

1963ஆம் ஆண்டு திசம்பர் மாதம் எழும்பூர் தொடர்வண்டி நிலையம். காவல் துறை புடை சூழ வருகிறார் முதல்வர் பக்தவச்சலம். கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்த ஒரு இளைஞன் பக்தவச்சலத்தின் காலில் விழுந்து கதறினான்.

“ஐயா, தமிழைக் காப்பாற்றுங்கள். இந்தியை நுழைய விடாதீர்கள். நீங்களும் தமிழர்தானே”

பக்தவச்சலம் காவல்துறைக்கு உத்தரவு போட்டார்.
“இந்தப் பைத்தியத்தைக் கைது செய்யுங்கள்”.

ஒரு மாத காலத்திற்குப் பின்-
25.1.1964ஆம் நாள் அந்த இளைஞன், திருச்சி தொடர்வண்டி நிலையத்தின் வாசலில் விடியற்காலை 4.30 மணிக்குப் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக் கொண்டு, ‘தமிழ் வாழ்க, இந்தி ஒழிக’ என்று கத்தியவாறு கருகிப் போனான்.

தமிழக முதல்வர் பக்தவச்சலத்தால் ‘பைத்தியம்’ என்று அழைக்கப்பட்ட அந்த வீர இளைஞன் தான் கீழப்பளூவூர் சின்னச்சாமி. இறக்கும் போது அவன் வயது 27.

சின்னச்சாமி. அவன் பெற்றோருக்கு ஒரே பிள்ளை. திருமணமாகி 23 ஆண்டுகள் கழித்து பிறந்த மகன்.

திருச்சி மாவட்டம் அரியலூர் வட்டத்தைச் சேர்ந்த கிராமம் கீழப்பளூவூர்.
ஆறுமுகம் தங்கத்தம்மாள் சின்னச்சாமியின் பெற்றோர்.

ஐந்தாம் வகுப்பு வரை படித்து விட்டு விவசாயம் பார்த்து வந்த சின்னச்சாமியின் ஓய்வு நேர வேலை சுயமரியாதை இயக்க நூல்களையும், நம் நாடு, திராவிட நாடு, முரசொலி ஏடுகளையும் படிப்பது தான்.

திராவிடச்செல்வி- தன் ஒரே மகளுக்குச் சின்னச்சாமி வைத்த பெயர். தன் மகளை, மனைவியை, தந்தையின் மரணத்திற்குப் பிறகு தன்னையே நம்பியிருந்த தாயை, வாழ வைக்க வேண்டிய கடமையை விட தாய்மொழிக்காகப் போராடும் வெறிதான், சின்னச்சாமியை ஆட்கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் தான், ‘தென் வியட்நாமில் புத்த பிக்குகள் அமைதி வேண்டி தீக்குளித்தார்கள்’ என்ற செய்தி ஏடுகளில் வெளிவந்தது. முதல்வர் பக்தவச்சலத்தால் கைது செய்யப்பட்டு, விடுதலையான சின்னச்சாமி அன்று முதல் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தான். 24.1.1964 வெள்ளிக்கிழமையன்று பள்ளிப் பிள்ளைகளுக்கு இனிப்பு வழங்கி ‘தமிழ் வாழப் பாடுபடுங்கள்’ என்று உணர்ச்சி பொங்கக் கூறிக் கொண்டிருந்தார்.

“வயலுக்குப் போய் வேலை பார்க்கக் கூடாதா? என்று கேட்டார்கள் அவரது தாயாரும், மனைவி கமலமும்.
“வேலைக்குத்தான் போகிறேன். திராவிடச் செல்வியைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்”
என்று கூறிவிட்டு, திருச்சி வந்து 25.1.1964 அதிகாலை 4.30 மணிக்கு ஒளிப்பிழம்பாய் எரிந்து போனார் சின்னச்சாமி.

ஆதிக்க இந்தி எதிர்ப்புப் போரில் தீக்குளித்து உயிர் மாண்ட முதல் தமிழரும் இவரே! இவர் மறைந்த நாளினையே மொழிப்போர் ஈகியர் நாளாக அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் திராவிட ஓட்டுக் கட்சிகளால் சடங்குத்தனமாக நினைவு கூறப்பட்டு வருகிறது.

மொழிப் போர் ஈகியர்களின் “தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சிமொழி” கனவு ஐம்பது ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் திராவிடக்கட்சிகளால் தகர்க்கப்பட்டு விட்டது. பேராயக் கட்சியின் (இந்தி, ஆங்கிலம், தமிழ்) மும்மொழிக் கொள்கையை எதிர்த்து முழங்கிய திராவிடக்கட்சிகள் அதற்கு மாற்றாக இருமொழிக் கொள்கையை (ஆங்கிலம், தமிழ்) முன்மொழிந்தன. அதன் விளைவாக தமிழ்நாட்டில் தமிழுக்குரிய இடத்தை தற்போது ஆங்கிலம் ஆக்ரமித்து விட்டது. தொடக்க கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை ஆங்கில வழியிலேயே கற்பிக்கப்படுகிறது. தமிழ் மொழி “தமிங்கில மொழி”யாக மாற்றப்பட்டு அதுவே பேச்சுமொழியாகவும் மாறி வருகிறது. அன்று வடமொழி கொண்டு தமிழை ஆரியம் அழித்தது. இன்று ஆங்கில மொழி கொண்டு தமிழை திராவிடம் அழித்து கொண்டு வருகிறது.

மும்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை, இருமொழிக் கொள்கை ஏமாற்றுக் கொள்கை, ஒருமொழிக் கொள்கையே உரிமைக் கொள்கை என்பதை கீழப்பளூவூர் சின்னச்சாமி மறைந்த இந்நன்னாளில் தமிழர்களுக்கு உரத்துக் கூறுவோம்!

1965ஆம் ஆண்டு ஆதிக்க இந்தி மொழியை எதிர்த்து தமிழ்மொழி காக்கும் போரில் உயிர் நீத்த ஈகிகள் பட்டியல்:

1. நடராசன், இறப்பு: 15.1.1939, சென்னை சிறையில் உயிர் நீத்தார்.

2. தாளமுத்து, இறப்பு: 12.3.1939, சென்னை சிறையில் உயிர் நீத்தார்.

3. கீழப்பழுவூர் சின்னச்சாமி, பிறப்பு: 30.7.1937, இறப்பு: 25.1.1964, காலை 4.30 மணிக்கு திருச்சியில் தீக்குளித்தார்.

4. கோடம்பாக்கம் சிவலிங்கம், இறப்பு: 26.1.1965, சென்னையில் தீக்குளித்தார்.

5. விருகம் பாக்கம் ஏ.அரங்கநாதன், பிறப்பு: 27.12.1931, இறப்பு: 27.1.1965, கோடம்பாக்கம் தொடர்வண்டி திடலில் தீக்குளித்தார்.

6. சிவகங்கை இராசேந்திரன், மாணவர். பிறப்பு: 16.7.1945, இறப்பு: 27.1.1965, சிதம்பரம் அண்ணாமலை நகரில் காவலரால் சுடப்பட்டு இறந்தார்.

7. கீரனூர் முத்து, பிறப்பு: 15.1.1943, இறப்பு: 27.1.1965, கீரனூரில் நஞ்சுண்டு மாண்டார்.

8. சத்தியமங்கலம் முத்து, பிறந்த ஆண்டு: 1943, இறப்பு: 11.2.1965, சத்தியமங்கலத்தில் தீக்குளித்தார்.

9. ஆசிரியர் வீரப்பன், பிறப்பு: 1.4.1938, இறப்பு: 11.2.1965, அய்யம்பாளையத்தில் தீக்குளித்தார்.

10. விராலிமலை சண்முகம், பிறப்பு: 11.8.1943, இறப்பு: 25.2.1965, விராலிமலையில் நஞ்சுண்டு இறந்தார்.

11. கோவை பீளமேடு தண்டபாணி, பி.ஈ.படித்தவர், பிறந்த ஆண்டு: 1944, இறப்பு: 2.3.1965, பீளமேட்டில் நஞ்சுண்டு இறந்தார்.

12. மயிலாடுதுறை சாரங்கபாணி, பி.காம்.மாணவர், பிறந்த ஆண்டு: 1945, இறப்பு 15.3.1965, மயிலாடுதுறையில் தீக்குளித்தார்.

சனவரி:25 மொழிப்போர் ஈகியர் நாளில், உயிர் நீத்த ஈகியரை நெஞ்சிலேந்துவோம்!

– கதிர்நிலவன்

Leave a Response