அன்புச்செழியனுக்கு ஆதரவு தரும் அமைச்சர் இவர்தான், விஷால் என்ன செய்யப்போகிறார்?

நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில், நவம்பர் 21,2017 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.நவம்பர் 22,2017 அன்று உடற்கூராய்வுக்குப் பின் அவரின் உடல் சொந்த ஊரான மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

நடிகர் சங்கச் செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் மதுரையில் நடந்த அசோக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார். மேலும், அசோக்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த விஷால் கூறுகையில்,

கந்துவட்டி பிரச்சினை அனைவரையும் பாதித்துள்ளது. கந்துவட்டியால் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் நான், கவுதம் மேனன், பார்த்திபன் ஆகியோர் இருக்கிறோம்.

கந்துவட்டி கொடுமையால் அசோக்குமார் மரணமே கடைசியாக இருக்க வேண்டும். அசோக்குமாருக்கு தொல்லை கொடுத்த அன்புசெழியன் தண்டிக்கப்பட வேண்டும். அன்புசெழியனுக்கு ஆதரவாக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், என்று யார் வந்தாலும் விடமாட்டோம்.

கந்துவட்டியால், அதிக வட்டியால் தயாரிப்பாளரை கொடுமைப்படுத்துவது தவறு. இனி அப்படி தொடர்ந்தால் புரட்சி வெடிக்கும். 90% தயாரிப்பாளர்கள் கடனில்தான் இருக்கிறோம். அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டுவோம்” என்றார்.

விஷால் சொன்ன அன்புச்செழியனுக்கு ஆதரவான அமைச்சர் பற்றி பிரபல ஏடொன்றில் கட்டுரை வெளியாகியுள்ளது.அதில்,,,,

இதுகுறித்து நம்மிடம் பேசிய உளவுத்துறை அதிகாரி ஒருவர், “மதுரையிலிருந்து சென்னை வந்து ஃபைனான்ஸ் செய்துவந்த அன்புச்செழியனின் பின்புலமே அவரின் ஜாதி பலம்தான். ஏற்கெனவே மதுரையில் சிறிய அளவில் ஃபைனான்ஸ் செய்து வந்தவர், ஒருகட்டத்தில் திரைப்படங்களை விநியோகிக்கும் அளவுக்கு வளர்ச்சியடைந்தார். அந்த வளர்ச்சிதான் அவருக்கு அரசியல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது. அரசியல்வாதிகள் தங்களிடம் இருக்கும் கறுப்புப் பணத்தை, அன்புச்செல்வனிடம் கொடுத்து ஃபைனான்ஸ் செய்வதன் மூலம் வெள்ளையாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனால், அதிகளவு பணம் பெருகிவிடவே அந்தச் செல்வாக்கால் சென்னைக்கு வந்து திரைப்படங்களுக்கு ஃபைனான்ஸ் செய்யத் தொடங்கினார். அரசியல் பின்புலம் இருந்ததால், எவ்வளவு பெரிய தயாரிப்பாளராக இருந்தாலும் மிரட்டி, அதிக வட்டியைக் கறாராக வசூல் செய்துவிடுவது அன்புச்செழியனின் வழக்கம். இந்தநிலையில், இவருக்குச் சில ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தின் மூத்த அமைச்சர் ஒருவரின் மகனுடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால், முன்பு இருந்ததைவிடவும் அதிக செல்வாக்குடன் தன் தொழிலை விரிவுபடுத்தினார். சம்பந்தப்பட்ட அமைச்சரோ, ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே பவர்ஃபுல்லாக வலம் வந்தவர் என்பதால், அன்புச்செழியனின் சாம்ராஜ்யமும் அதிகரித்தது. பணிவுக்குப் பெயர்போன அந்தத் தென் மாவட்ட அமைச்சரின் மகனும், அன்புச்செழியனும், அடிக்கடி ஹோட்டலில் சந்தித்துப் பேசிக்கொள்வது வழக்கம்.

அமைச்சரின் மகனிடமும் சினிமா ஃபைனான்ஸ் மூலம் கிடைக்கும் வருமானம் பற்றி அன்புச்செழியன் ஆசைகாட்ட, அவர் தங்களிடம் இருந்த கோடிக்கணக்கான கறுப்புப் பணத்தை அன்புச்செழியன் மூலம் சினிமாத் துறையில் முதலீடு செய்துள்ளார். சமீபத்தில்கூட ஒரு திரைப்பட விநியோகப் பிரச்னை ஏற்பட்டு, அதன் தயாரிப்பாளர் அன்புச்செழியனிடம் பிரச்னை செய்தபோது, அமைச்சரின் மகனே நேரடியாகத் தலையிட்டு, அந்தத் தயாரிப்பாளரிடம் பேசி ‘பணத்தை ஒழுங்காக செட்டில் செய்துவிடுங்கள்’ என்று மிரட்டியுள்ளார். அந்த அமைச்சருக்குச் சமீபத்தில் இறங்குமுகம் ஏற்பட்டபோதும், அவர் வீட்டில் அன்புச்செழியனை அடிக்கடி பார்க்க முடிந்தது. அமைச்சரின் மகனுடன் அந்த வீட்டிலேயே அன்புச்செழியன் உலா வந்தது அனைவரும் அறிந்ததே.

அன்புச்செழியனிடம் கோடிக்கணக்கில் பணம் கொட்டிக்கிடப்பதற்கு அந்த அமைச்சரின் மகனும் ஒரு காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இந்நிலையில் நேற்று அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டதும், அன்புச்செழியன் அமைச்சரின் மகனுடன் தொடர்புகொண்டு தன்னைக் காப்பாற்றும்படிக் கேட்டுள்ளார். அன்புச்செழியன் சிக்கினால் தானும் சிக்கவேண்டிய சூழல் உருவாகும் என்பதால், அவரைக் காப்பாற்ற முயன்ற அமைச்சரின் மகன், இரவோடு இரவாக அன்புச்செழியனை தன் வீட்டிற்கு வரவழைத்துத் தங்க வைத்துக் கொண்டார். அமைச்சர் ஆதரவுடன், ரகசியமான ஓர் இடத்தில் அன்புச்செழியனை தங்க வைத்துவிட்டனர். மேலும் அமைச்சரிடம் சொல்லி, காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் அன்புச்செழியன் விஷயத்தில் தீவிர தேடுதல்வேட்டை நடத்த வேண்டாம் என்றும் சொல்லியுள்ளார்களாம். விரைவில் நீதிமன்றம் மூலம் முன்ஜாமீன் பெறுவதற்கான வேலைகளில் அன்புச்செழியனுக்கு நெருக்கமானவர்கள் இறங்கியுள்ளார்கள். இந்தப் பிரச்னையிலிருந்து அன்புச்செழியன் தப்பித்தாலும், மீண்டும் இவரது அதிகாரப்போக்கு சினிமாத் துறையில் தொடரும். அதைக் கட்டுப்படுத்த முடியாது. காரணம், இவர் பின்னால் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு அன்புச்செழியன் தேவைப்படும் நபராக இருக்கிறார்” என்று பேசி முடித்தார் அந்த அதிகாரி.

இந்தக்கட்டுரையில் உள்ள குறிப்புகளின்படி அந்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என்பது புலனாகிறது.இப்போது விஷால் என்ன செய்யப்போகிறார்?

Leave a Response