
இந்திய ஒன்றிய தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியை மேற்கொண்டு வருகிறது. இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் கொண்டு வருவது வாக்காளர்களை நீக்கும் தந்திரம்.வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் காலகட்டத்தில் பண்டிகைகள் வருவதால் வாக்காளர் பட்டியலில் சேர விரும்பும் வாக்காளர்களின் பெயர் விடுபட நேரிடும். தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள 2002, 2005 வாக்காளர் பட்டியல்கள் முழுமையற்றதாகவும், குழப்பம் விளைவிப்பதாகவும் அமைந்துள்ளன. எதிர்கட்சிகளை முடக்க, தேர்தல் ஆணையமே அந்த வேலையில் இறங்கியுள்ளது. தேர்தலை திருட்டுத்தனமாக நடத்த இன்றைக்கு ஒன்றிய அரசு இறங்கியுள்ளது. நாம் அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டிய காலகட்டம் இது.
முதலில் உங்கள் ஒவ்வொருவர் வாக்கையும் நீங்கள் பாதுகாக்க வேண்டும். உங்களைச் சுற்றி இருக்கிற தகுதியான ஒரு வாக்காளர்கூட, பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விடக்கூடாது. இதில் கண்ணும், கருத்துமாக நாம் ஈடுபடவேண்டும். அதேமாதிரி, போலி வாக்காளர்கள் சேர்ப்பதை அனுமதிக்கக்கூடாது என்று முதலமைசசர் மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அண்மையில் தேர்தல் நடந்து முடிந்த பீகாரில் பாஜக வெற்றி பெற்றதே எஸ்ஐஆர் மூலம் வாக்காளர்கள் நீக்கம்தான் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
அதேபோல, தமிழ்நாட்டிலும் குறிவைத்து வாக்காளர்களின் பெயரை நீக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நீக்குவது மட்டுமல்ல, வடமாநிலத்தவர்களை இங்கே சேர்க்கவும் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அப்படி சுமார் ஐம்பது தொகுதிகளை பாஜக குறிவைத்துள்ளது என்று சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்றாலும், இந்த 50 தொகுதிகளில் அதிதீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், தலித்துகள் அதிகமுள்ள 29 தொகுதிகளைத் தேர்வு செய்து அதில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வாக்காளர்களை நீக்கவும், 12 தொகுதிகளில் வட இந்தியர்களை சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக தான் சென்னை எழும்பூர், ராயபுரம், துறைமுகம், அம்பத்தூர், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், பூந்தமல்லி ஆகிய 12 தொகுதிகளில் வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் தொகுதிகளைக் குறிவைத்து புதிய வாக்காளர்களாக அவர்களை இணைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
கிறிஸ்துவர்கள் அதிக அளவில் வாக்காளர்களாக இருக்கும் நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், பத்மநாபபுரம், உதகமண்டலம், கூடலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை ஆகிய தொகுதிகளிலும், இஸ்லாமியர்கள் அதிக அளவில் வாக்காளர்களாக இருக்கும் இராமநாதபுரம், ஆலங்குடி, பட்டுக்கோட்டை, வாணியம்பாடி, நாகப்பட்டினம், ஸ்ரீவைகுண்டம், அரவக்குறிச்சி, குன்னம் ஆகிய தொகுதிகளிலும், பட்டியல் இனத்தவர் அதிக வாக்காளர்களாக இருக்கும் பரமக்குடி, மதுராந்தகம், செய்யூர், விருத்தாசலம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம், திருவாரூர், கீழ்வேளூர், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளிலும் சிறப்பு தீவிரத் திருத்தத்தை அதிதீவிரமாக செயல்படுத்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
வட இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டிற்குள் வந்திருக்கும் வாக்காளர்களை இணைத்தும், தமிழ்நாட்டிலிருக்கும் இஸ்லாமிய, கிறித்துவ, பட்டியலின வாக்காளர்களை நீக்கியும் குறைந்தது 41 தொகுதிகளையாவது கைப்பற்றவேண்டும் என்று பாஜக நினைக்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜக கேட்கும் 60 தொகுதிகளில் இந்த 41 தொகுதிகளும் அடங்குகிறது. இவற்றில் சில தொகுதிகள் அதிமுகவிடம் உள்ளன. அவற்றை இம்முறை பாஜக கேட்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
இந்தத் தகவலால் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது.


