
மும்பை அந்தேரியில் தேசியவாத காங்கிரசுக் கட்சியின் (என்.சி.பி) தலைவரும், மகாராஷ்டிரா அரசியலில் நன்கு அறியப்பட்டவருமான பாபா சித்திக் (66),அக்டோபர் 12 இரவு சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலைக்கு,குஜராத் சபர்மதி சிறையில் இருக்கும் சர்வதேச கிரிமினல் லாரன்ஸ் பிஷ்னோய் பொறுப்பேற்றார்.
இந்தி முன்னணி நடிகர் சல்மான்கானை கொல்லவிருப்பதாக 2018 இல் லாரன்ஸ் பிஷ்னோய் அறிவித்தார். சல்மானை கொலை செய்யும் லாரன்ஸ் கும்பலின்முயற்சி 2 முறை முறியடிக்கப்பட்டுள்ளது. மும்பை பாந்த்ராவில் நடிகர் சல்மான்கான் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நடிகர் சல்மான் ஏற்கெனவே ஒன்றிய அரசு சார்பில் ஒய் ப்ளஸ் பாதுகாப்பில் உள்ளார்.
கொல்லப்பட்ட பாபா சித்திக், சல்மான்கானின் மிக நெருங்கிய நண்பர் ஆவார்.சல்மானுக்கும், ஷாருக்கானுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பை பாபா சித்திக் தலையிட்டு தீர்த்து வைத்ததாகக் கூறப்படுகிறது.
பாபா சித்திக் கொலைக்குப் பிறகு ஷுபு லோங்கர் என்பவர், ‘டி கம்பெனி தாவூத் மற்றும் நடிகர் சல்மானுக்கு உதவுபவர்களை விட மாட்டோம்’ என தனது முகநூலில் எச்சரித்துள்ளார்.அதோடு, தன்னை லாரன்ஸ் கும்பலை சேர்ந்தவர் எனக் குறிப்பிட்டுள்ள அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதற்கு முன் கனடாவில் குற்றச்செயல்கள் புரிந்து வரும் கோல்டிபிராரும் சல்மானுக்கு 3 முறை எச்சரிக்கை விடுத்துள்ளார். இவர் லாரன்ஸின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.
பஞ்சாப்பின் பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்தவர் லாரன்ஸ். இவர்கள் விலங்குகளையும், மரங்களையும் வணங்குபவர்கள். குறிப்பாக சிங்காரா மான்களை பிஷ்னோய்கள் தங்கள் சமூகத்தில் அதிகம் முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
இந்நிலையில் சிங்காரா மான் வேட்டைப் புகாரில் சல்மான்கான் சிக்கியதால் அவரை லாரன்ஸ் குறி வைத்துள்ளார். 1998 இல் இராஜஸ்தானின் ஜோத்பூர் காடுகளில் சல்மான்கான் சிங்காரா மான்களை வேட்டையாடிய புகாரில் சிக்கினார்.
இதன் ஒரு வழக்கில் 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு ஜோத்பூர் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார். பிறகு இரு வழக்குகளில் ஆதாரங்கள் இல்லை என்று கூறி விடுதலை செய்யப்பட்டார். இதன் பிறகு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்குகளை இராஜஸ்தான் நீதிமன்றம் மீண்டும் விசாரித்து வருகிறது.
இந்நிலையில்தான் இப்போது பாபா சித்திக் கொலைக்குப் பிறகும் சல்மான்கானுக்கு வெளிப்படையாகக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுவருகிறது.
இதனால் அவர் வீட்டுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதோடு வீட்டை விட்டு வெளியில் எங்கும் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
