அடுத்தடுத்து சிக்கிய ஆதாரங்களால் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்குச் சிக்கல்

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன், திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும், 5 ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் துணை நடிகை சாந்தினி,அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் அடிப்படையில் மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து,மணிகண்டன் பிணை கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.ஆனால், மணிகண்டனின் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்,சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மணிகண்டனுக்கு, சொகுசு வசதிகள் கொடுக்கப்பட்டதாகக் கூறி,அவரை புழல் சிறைக்கு அதிகாரிகள் மாற்றம் செய்தனர்.

இந்த நிலையில், மணிகண்டனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அடையாறு மகளிர் காவல்துறையினர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து,சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பு முன்னாள் அமைச்சரை ஆஜர்படுத்தினர்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுத்து வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

இதனைத் தொடர்ந்து,முன்னாள் அமைச்சர் மணிகண்டன் விவகாரத்தில் கோபாலபுரத்தை சேர்ந்த மருத்துவரிடம் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.அவர்,மணிகண்டன் கட்டாயப்படுத்தியதால் நடிகைக்கு கருக்கலைப்பு செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும்,நடிகையின் முகத்தில் காயம் இருந்தபோது இந்த கருக்கலைப்பு அளித்ததாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், நடிகையுடன் ஓட்டலில் மணிகண்டன் தங்கியிருந்ததற்கான ஆதாரம் சிக்கியது. இதனால்,சம்மந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்று விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இவ்விரு விசயங்களும் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சிக்கல் அதிகரித்துள்ளது என்கிறார்கள்.

Leave a Response