
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ஆளப்போறான் தமிழன் என்று நாங்கள் பாட்டு போட்டிருக்கோம் அதைச் செயல்படுத்தவேண்டியது நீங்கள்தான் என்று மக்களைப் பார்த்துச் சொன்னார் ஏ.ஆர்.ரகுமான். ஒட்டுமொத்தத் தமிழர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய அந்தச் சொற்றொடர் மேடைக்காகச் சொல்லப்பட்டதல்ல என்பதை மெய்ப்பித்திருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். 13.09.2017 தேதியிட்ட ஆனந்தவிகடன் இதழில் அவர் கொடுத்திருக்கும் நீண்ட பேட்டியில் ஒரு கேள்வியும் அதற்கான விடையும் இங்கே.
‘மெர்சல்’ இசை வெளியீட்டு விழாவில் “தமிழன் ஆளணும்ங்கிறது என் விருப்பம் சொன்னீங்க. உங்ககிட்ட இருந்து இப்படியான வார்த்தைகள் எதிர்பாராததா இருக்கே?’’
‘`நான் இந்த ஊர்ல பிறந்திருக்கேன், நான் ஒரு தமிழன். உலகம் முழுக்கச் சுத்துறேன், எல்லா நாட்டு மக்களையும் ஸ்டடி பண்றேன். நாம எந்த இடத்துல இருக்கோம்? நமக்கு மூளை இருக்கு. அந்த மூளைக்குத் தகுந்த வேலைகளைப் பண்றோமா? அதைப் பயன்படுத்தித் தலைமைப் பொறுப்புக்குப் போக மெனக்கெடுறோமா? இப்படிப் பல கேள்விகள் முளைச்சுது. தமிழன்னு சொல்றோம், பெருமையா நினைச்சுக்கிறோம், தமிழன்ங்கிற வார்த்தையைத் தலையில தூக்கி வெச்சுட்டு ஆடுறோம். ஆனா, அந்த வார்த்தையை மத்தவங்க கேட்கும்போது வலிமையா இருக்கணும்ங்கிறதுக்கு நாம என்ன பண்றோம்? நம்ம கலாசாரத்தை, அடையாளத்தை வேற லெவலுக்கு எடுத்துட்டுப் போறோமா? நம்ம தனித்துவத்தை உலகத்துக்கு உணர்த்துறோமா? இன்னும் கேள்விகள் நீண்டுக்கிட்டே இருக்கு. இதுக்கான பதிலைத்தானே நாம முன்னெடுக்கணும். ‘தமிழர்களோட பண்பைப் பாருங்க, மரியாதையைப் பாருங்க, அறிவைப் பாருங்க, தமிழர்கள் வன்முறைகளை எப்படிச் சமாளிக்கிறாங்க பாருங்க’ன்னு மத்தவங்க பேசணும். அதுதானே மனிதாபிமானம். நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தியெல்லாம் வரலாற்றுல பதிஞ்சதுக்கான காரணம், எதிரிகளை மன்னிச்சதுதான். கல்வீசி அடிக்கிறதும், குத்திக் கொலை பண்றதும் வரலாற்றுல பதியாது. அவங்க சரியில்லை, இவங்க சரியில்லைனுலாம் சொல்ல முடியாது. நாம மாறணும். பவர் எல்லோரோட கைலேயும் இருக்கு. யூனிட்டி இஸ் வெரி இம்பார்டென்ட். இங்கே எல்லோரும் அதைப் பிரிக்கணும்னு ஆசைப்படுறாங்க. நாம எந்தளவுக்குச் சேர்க்கலாம்னு யோசிக்கணும். இதெல்லாம் பண்ணாலே, தமிழன் தலை நிமிர்வான். தமிழுக்குத் தேவையான மரியாதை ஆட்டோமேட்டிக்கா வரும்!’’
இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் கூறியிருக்கிறார். மகிழ்ச்சி


