சட்டமன்றத்தில் சீமான் குரல் ஒலிக்கவேண்டும் – சேரன் வெளிப்படை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்தத் தேர்தலில் திமுக அதிமுக கட்சிகள் பெரும் கூட்டணிக்கட்சிகளோடு போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி தனியாகக் களம் காண்கிறது.

இந்நிலையில்,இயக்குநர் சேரன் இன்று வெளியிட்டுள்ள பதிவில்…

எனக்கு இவரும் இவரின் தம்பி தங்கைகளும் சட்டசபை செல்லவேண்டும் என தோன்றுகிறது.ஏனெனில் இவர்களின் நோக்கம் மக்களுக்கு நல்லது செய்வது,சமூகத் தீங்குகளை ஒழிப்பது.நல்வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பது.. ஊழல் குற்றங்கள் நடக்காமல் மக்களின் பணம் சூறையாடப்படாமல் தடுத்து அதை நல்ல திட்டங்களுக்கு பயன்படுத்த ஆலோசனைகள் வழங்குவது.

எல்லா மேடைகளிலும் இவர் முழக்கம் எதிர்கால வாழ்வியல் பற்றியே இருப்பதால் இவர்கள் சட்டமன்றத்தில் இருந்தே ஆகவேண்டும்.ஆக்கப்பூர்வமாகச் சிந்திக்கும் ஆற்றலை கடந்த அரசுகள் கைவிட்டுவிட்டு வெறும் இலவசங்களை ஆசைகாட்டி வாக்கு வாங்கி,தேர்தலில் முதலீடாக ஒவ்வொரு வேட்பாளரும் கோடிக்கணக்கில் செலவு செய்துவிட்டு அதை நூறுமடங்காக எப்படி எடுப்பது என திட்டம் தீட்டும் அரசாகவே நாம் இதுவரை பார்த்திருக்கிறோம்.

கொள்ளையையும் அலட்சியங்களையும் போதைப் புழக்கத்தையும் வன்முறைகளையும் தட்டிக்கேட்க அழுத்தமான குரல்கள் தேவை.அந்தக் குரல் சீமானின் குரலாகவும் சீமானின் தம்பி தங்கைகளின் குரலாகவும் இருந்தால் அரசையும் அரசு அதிகாரிகளையும் நல்வழிப்படுத்தும் மேய்ப்பாளர்களாக மாறுவார்கள்.

ஆகவே, இந்தத் தேர்தலில் நாதக வேட்பாளர்களில் யாரெல்லாம் தங்களது கருத்துகளை முன்வைத்து அழுத்தமாகப் போராடுகிறார்களோ அவர்களை அடையாளம் காணுங்கள்.அந்தக் குரல்கள் நமக்கான குரல்கள்.வெற்றி பெற்று அவர்கள் உள்ளே சென்றால் நமக்குத்தான் நல்லது செய்யப்போகிறார்கள்.இளைஞர்களின் ஆற்றலை வீணாக்கிவிட வேண்டாம்.

தலைமுறை தலைமுறையாக ஆட்சி நடத்துபவர்களும் அடுத்ததலைமுறைக்கு பதவிகளையும் அதிகாரங்களையும் தாரை வார்ப்பவர்கள் இனி வேண்டாம்.நம் பிள்ளைகள் முதலில் வாரிசு அரசியலைப் புறந்தள்ளி நல்லதோர் மாற்று அரசியலை முன்னெடுக்க நினக்கும் இளைஞர்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். சிந்திப்போம்.நம்மை நாமே ஆள்வோம்.

கைகட்டி அடிமைகளாக நிற்கப்போகிறோமா? நல்ல திசையை நம் பிள்ளைகளுக்குக் கைகாட்டி நாமே தலைவர்களாய் வாழப்போகிறோமா?.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Response