
கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அளித்த பேட்டியில்…
இளையராஜாவிற்கு பாரத ரத்னா விருது வழங்கினால் எங்களுக்குப் பெருமை தான். விளையாட்டுத்துறையில் சச்சின் டெண்டுல்கருக்கு கொடுக்கிறார்கள். அதே சமயம் வ.உ.சி, பாரதியார் ஆகியோருக்குத் தரவில்லை. சச்சினை விட இவர்கள் இழிவாகப் போய்விட்டார்களா?. இளையராஜாவை இசை அமைப்பாளராகப் பார்ப்பதை விட நாங்கள் அவரை இசை இறைவனாகத் தான் பார்க்கிறோம். அவரது பெயரில் விருது வழங்குவது எனக்குப் பெருமை தான்.முதலில் அவருக்கு நான்தான் பாராட்டு விழா எடுப்பதாக இருந்தேன். தமிழ்நாடு அரசு அதனைச் செய்யும் பொழுது இடையூறு செய்யவேண்டாம் என்று விட்டுவிட்டேன்.அரசு பாரதிராஜா போன்றவர்களையும் கவுரவப்படுத்தி இருக்க வேண்டும்.
திருச்சியில் நடிகர் விஜய் பிரசாரத்திற்கு வந்த கூட்டம் என்பது, அவரை திரையில் பார்த்தவர்கள் தற்பொழுது நேரில் பார்க்க கூட்டமாக வரத்தான் செய்வார்கள். நாங்களும் சிறு வயதில் எம்ஜிஆரை காண மணிக்கணக்கில் காத்துக் கிடந்தோம்.சகோதரர் அஜீத் வந்தால் இதைவிட அதிகக் கூட்டம் கூடும். நயன்தாரா வந்தால் இதை விட அதிக கூட்டம் வரும். ரஜினி வந்தாலும் கூட்டம் வரும்.கூட்டத்தைப் பார்க்காதீர்கள் கொள்கைகளைப் பாருங்கள்.
மணிப்பூர் பற்றி எரியும் பொழுது போகாமல் இப்பொழுது பிரதமர் செல்கிறார். வரும் 2026 இல் என் கையில்தான் ஆட்டம் இருக்கும்.
இங்கே இருக்கக்கூடியவர்கள் மக்களின் இதயத்தில் இருந்து மக்களின் பிரச்னையை பேச மாட்டார்கள். இங்கே இருக்கக்கூடிய அரசியல்வாதிகள் பேப்பரில் எழுதி வைத்துப் படிக்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமியும் பேப்பரில் எழுதி வைத்துத்தான் படித்து வருகிறார். இவர்கள் பெரிய தாளை வைத்துப் படிக்கிறார்கள்.
விஜய்யை இவ்வாறு நிற்க வைத்து எத்தனை மணி நேரம் கேள்வி கேட்க முடியும். அவர் செய்தியாளர் சந்திப்பிற்கு வரவில்லை என்று கூறுகிறார். அப்படி என்றால் நேரடியாக கோட்டைக்கு வருகிறேன் என்று மட்டும் கூறுகிறார். விஜய்க்கு கூடிய கூட்டம் ஓட்டாக மாறுமா என்பது காத்திருந்தால் தான் தெரியும். எதுவாக இருந்தாலும் மே மாதம் தெரிந்து விடும் அதுவரை பொறுத்திருப்போம்.
இவ்வாறு சீமான் கூறினார்.


