செங்கோட்டையனுடன் 10 முன்னாள் அமைச்சர்கள் தொடர்பு – எடப்பாடி கலக்கம்

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை, நேற்று அவரது இல்லத்தில் பெங்களூரு புகழேந்தி சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்….

ஜெயலலிதா, எம்ஜிஆரை விட பெரிய தலைவர் என்று எடப்பாடி நினைக்கிறார். செங்கோட்டையன் சிரித்த முகத்துடன் இருக்கின்றார். தான்தோன்றித்தனமாக முடிவெடுக்கும் மனிதராக பழனிச்சாமி இருக்கிறார். ஜெயலலிதா, செல்லப்பிள்ளையாக செங்கோட்டையனை வைத்திருந்தார். அவரைக் கட்சியிலிருந்து நீக்கி இருக்கிறார்.

ஜெயலலிதா தான் கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளர். அவரையே தூக்கி எறிந்து விட்டு சர்வாதிகாரியாக செயல்படுகிறார் எடப்பாடி பழனிச்சாமி. செங்கோட்டையன் வரும் போது நாய்க் குட்டி போல் அவர் பின்னால் ஓடி வந்தவர் தான் எடப்பாடி. பணம் வந்த பிறகு திமிர் வந்துவிட்டது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத தலைவராக வந்து கட்சியை நாசப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவரை கட்சி நிர்வாகிகள் ஏற்கவில்லை, தொண்டர்கள் ஏற்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமி செல்லும் இடங்களில் பணமும், பிரியாணியும் கொடுக்கிறார். அதனால், கூட்டம் கூடுகிறது. கட்சியின் முதலாளி எடப்பாடி பழனிச்சாமி அல்ல. அவர் ஒரு கைக்கூலி, அவர் கட்சியை விட்டு யாரையும் நீக்குவதற்கு எந்த அதிகாரமும் இல்லை. ஓபிஎஸ் உள்ளிட்டோருடன் இணைந்து செங்கோட்டையனை செயல்படுவதற்காக அழைப்பு விடுத்துள்ளோம். முன்னாள் அமைச்சர்கள் 10-15 பேர் தொடர்ந்து எங்களுடன் தொடர்பில் உள்ளனர். சசிகலா, ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் அனைவரும் ஒன்றாக ஒரு இடத்தில் சந்தித்துப் பேச வேண்டும் என்பது என் ஆசை. நூறு சதவீதம் அதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இதை செங்கோட்டையனிடம் பேசி உள்ளேன். தங்கமணியும் வேலுமணியும் இணைந்து இயக்கும் ரோபோ தான் எடப்பாடி பழனிச்சாமி. வெளியேற்றப்பட்டவர்கள் நாங்கள் கூடுவோம், எடப்பாடி பழனிச்சாமியை நீக்குவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தப் பேட்டியில்,முன்னாள் அமைச்சர்கள் 15 பேர் செங்கோட்டையனுடன் தொடர்பில் உள்ளனர் என்று கூறியிருப்பது எடப்பாடி அணிக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள்.

Leave a Response