
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சாவின் பேச்சு பெரும் பதவியின் கண்ணியத்தைக் குறைப்பதாகும் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்….
இந்திய அரசில் அரசியல் சட்டப்படி மிக உயர்ந்த பதவிகளில் அமர்ந்திருப்பவர்கள் மாற்றுக் கட்சித் தலைவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது கண்ணியக் குறைவாகவும், நாடாளுமன்ற மரபுகளுக்கு மாறாகவும், தடித்த வார்த்தைகளால் குறிப்பிடுவது மிகவும் வருந்தத்தக்கது. இந்தப் போக்கினை அவர்கள் திருத்திக்கொள்ளவேண்டும்.
பிரிட்டனின் நாடாளுமன்ற மரபுகளை நாம் முன்மாதிரியாகக் கொண்டிருக்கிறோம். அதன்படி மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களைக் குறிப்பிடும்போது அவர்களின் பெயர்களையே கூறக்கூடாது. மாறாக, இந்தத் தொகுதியைச் சேர்ந்த உறுப்பினர் என்று மட்டுமே கூறவேண்டும். பெயரைக் குறிப்பிடுவது நாடாளுமன்ற மரபுகளுக்கு எதிரானதாகும்.
இந்திய அரசில் உள்துறை அமைச்சராகப் பெரும் பொறுப்பு வகிக்கும் அமித்சா அவர்கள், அண்மையில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், தற்போது குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிடும் சுதர்சன் ரெட்டி குறித்துக் குறிப்பிடும்போது, நக்சல் இயக்கத்தின் ஆதரவாளர், அதற்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியவர் என்னும் கடுமையான குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறார்.
தான் வகிக்கும் பெரும் பதவியின் பொறுப்பை எண்ணிப் பாராமல் மாற்றுக் கட்சி வேட்பாளரை மிகக் கடுமையான சொற்களால் தாக்கியிருக்கும் உள்துறை அமைச்சரின் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
உச்சநீதிமன்ற நீதிபதியையோ அவரது தீர்ப்பையோ விமர்சனம் செய்வது நீதிமன்ற அவமதிப்பாகும். மேலும், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் மாற்று அணியின் வேட்பாளராகப் போட்டியிடும் ஒருவர் மீது தக்க ஆதாரம் எதுவுமின்றி கடுமையான குற்றச்சாட்டை அள்ளிவீசுவது பொறுப்பற்ற போக்காகும். உள்துறை அமைச்சர் பதவியின் கண்ணியத்தைச் சீரழிப்பதாகும். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


