செம்மணியில் கிடைத்த வலுவான சாட்சி – ஐங்கரநேசன் அழைப்பு

கறுப்பு யூலை நினைவுக் கருத்தரங்கு 27.07.2025 அன்று யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்றது.

அதில், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டார். அங்கு அவர் ஆற்றிய உரையின் ஒரு பகுதி….

இலங்கையர் தினத்தைத் கொண்டாடுவதால் மட்டும்
தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாது

மகாவலி கங்கை நாடெங்கள் நாடே என்று பெருமை பொங்கப் பாடியவர்கள் தமிழர்கள். சிங்களமும் செந்தமிழும் சேர்ந்திங்கு வாழ்வதுந்தன் பெருமையம்மா என்று சகோதரத்துவம் பாடியவர்கள் தமிழர்கள். இலங்கை என்பது எம் தாய்த்திருநாடு என்று இறுமாந்து பாடியவர்கள் தமிழர்கள்.ஆனால்,தமிழர்கள் தங்களை இலங்கையர்கள் என்று எவ்வளவுதான் உரத்துச் சொன்னாலும் இல்லை நீ தமிழன் என்றே பேரினவாதம் சொன்னது.

தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே காலத்துக்குக் காலம் தமிழர்களுக்கெதிரான கலவரங்கள் நிகழ்த்தப்பட்டன.முள்ளிவாய்க்கால் வரை இதுவே நீண்டது.இப்போது ஆடிக்கலவர நாளில் சகோதர தினத்தை முன்னெடுத்துள்ள ஜே.வி.பி அரசாங்கம் விரைவில் இலங்கையர் தினத்தைக் கொண்டாடவுள்ளது. ஆனால்,இந்தத் தினங்களைக் கொண்டாடுவதால் மட்டும் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாது

நினைவேந்தல்கள் வரலாற்றை நினைவுபடுத்துகின்றன. வரலாறு ஒருவரை எங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றதோ அங்கிருந்துதான் அவர் தனது அடுத்த பயணத்தைத் தொடரமுடியும்.நதிகளைப் போன்றே வரலாறும் பின்னோக்கிப் பாய்வதில்லை.இதுவே வரலாற்றின் நியதி.வரலாறு தமிழ் மக்களை முள்ளிவாய்க்காலில் கொண்டு வந்து நிறுத்தியது.

ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட அந்த இடத்தில் இருந்துதான் அஞ்சலோட்டம் போன்று அடுத்த போராட்டத்தைத் தமிழ் மக்கள் ஜனநாயக வழியில் முன்னெடுத்திருக்கவேண்டும்.முள்ளிவாய்க்கால் பேரழிவு சர்வதேச நாடுகளை எமது போராட்டத்தின் நியாயப்பாடுகளை ஏற்றுக்கொள்ள வைப்பதற்கான சாத்தியங்களைத் தன்னகத்தே கொண்டிருந்தது.

ஆனால், அதைச் செய்யத் தவறிய எமது தலைவர்கள், மாறாக இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் பிணை எடுத்துக்கொடுத்தார்கள்.

வரலாறு இன்னுமொரு சந்தர்ப்பமாகச் செம்மணியில் மனிதப் புதைகுழிகளை அடையாளப்படுத்தியுள்ளது. போரின் சாட்சிகளாக,இன அழிப்பின் சாட்சிகளாக எம்முன்னால் பலர் இன்றும் உள்ளார்கள்.இவர்களால் உயிர்ப்பயம் காரணமாக உண்மைகளை அதிகம் வெளிப்படுத்த முடியாது. உயிருள்ள சாட்சியங்களைவிட வலுவான சாட்சியங்களாக இன்று எம்முன்னே செம்மணி மனிதப்புதைகுழிகளும் அவற்றில் இருந்து வெளிப்படும் எமது உறவுகளின் எலும்புக்கூடுகளும் உள்ளன. எலும்புக்கூடுகள் தனது கழுத்தை இறுக்கப் போகின்றது என்று அஞ்சும் பேரினவாதம் இதனைத் திசை திருப்புவதற்கான சகல எத்தனங்களிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. செம்மணிப் புதைகுழிகள் தந்துள்ள அரியவாய்ப்பை எமது தலைவர்கள் சரியாகப் பயன்படுத்தி நீதிக்கான, விடுதலைக்கான எமது பயணத்தை வேகமாகத் தொடர முன்வரவேண்டும்

இவ்வாறு பொ.ஐங்கரநேசன் உரையாற்றினார்.

Leave a Response