
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஒன்றிய சாலைப் போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது….
நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை மெதுவாக அதிகரித்து வருகிறது. ஒரு சில பணக்காரர்களிடமே செல்வம் குவிந்து வருகிறது. அப்படி நடக்கக்கூடாது. வேலைவாய்ப்புகளையும் கிராமப்புறங்களையும் மேம்படுத்தும் விதமாக பொருளாதாரம் வளர வேண்டும். வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் விதமான பொருளாதார முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறோம். செல்வத்தைப் பரவலாக்க வேண்டிய அவசியம் உள்ளது. அந்தத் திசையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகியோர் தாராளமயமாக்கலை ஏற்றுக் கொண்டதற்காகப் பாராட்டுகிறேன். ஆனால் கட்டுப்படுத்தப்படாத மையப்படுத்தல் பற்றி கவனம் தேவை. சுங்கச்சாவடிகள் மூலம் ரூ.55,000 கோடி வருவாய் கிடைக்கிறது. அடுத்த 15 ஆண்டுகளுக்கு இதைப் பணமாக்கினால், ரூ.12 இலட்சம் கோடி கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
காங்கிரசு தலைவர் இராகுல்காந்தி, பாஜக ஆட்சியின் மீது வைக்கும் முக்கியமான குற்றச்சாட்டே, மோடி அரசாங்கம் ஒரு சில பணக்காரர்களுக்காக மட்டுமே செயல்படுகிறது என்பதுதான்.
அந்தக் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளும் வகையில் ஒன்றிய் அமைச்சர் நிதின்கட்கரியும் பேசியிருப்பது எதிர்க்கட்சியினர் மத்தியில் வியப்பையும் பாஜகவினரிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.


